பீகாரில் 121-140 இடங்களை வெல்லும் என்டிஏ.. பின்னாலே வரும் தேஜஸ்வி.. ஆக்ஸிஸ் மை இந்தியா எக்ஸிட் போல்
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக பிரபலமான ஆக்ஸில் மை இந்தியா நிறுவனம் தரப்பில் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பிலும் என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறப்பட்டிருந்தாலும், இந்தியா கூட்டணி கடுமையான சவால் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 121 தொகுதிகளுக்கும், நேற்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் 122 தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது. மொத்தமாக பீகார் சட்டசபைத் தேர்தலில் 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஆண்களை விடவும் பெண்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

இரு தரப்புக்கும் இடையிலான வித்தியாசம் சுமார் 9 சதவிகிதமாக அமைந்துள்ளது. பீகார் தேர்தலில் ஜேடியு - பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும், ஆர்ஜேடி- காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கிறது. இதனிடையே நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்பில் என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தவறாக கணித்ததற்காக இந்த நிறுவனத்தின் பிரதீப் குப்தா நேரலையிலேயே கண்ணீர் சிந்தினார். இதற்கு பின் தனது கருத்துக்கணிப்புகள் கூடுதல் கவனம் கொள்வேன் என்றும், பரவலாக அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கணிப்புகளை எடுப்பேன் என்றும் பேசி இருந்தார்.
தற்போது பீகார் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பை ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பீகாரில் என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு கட்சிகளுக்கு இடையிலான வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
என்டிஏ கூட்டணி 121-140 தொகுதிகளை வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், இந்தியா கூட்டணி 98 முதல் 118 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சிக்கு 0-2 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிதிஷ் குமாரை விடவும் தேஜஸ்வி யாதவ் முதல்வராக இருக்கவே 34 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications