பீகாரில் பாஜக கூட்டணிக்கு தோல்வி.. ஒரே ஒரு சர்வே மட்டும் காங்கிரஸ் கூட்டணிக்கு தரும் ஹேப்பி நியூஸ்
பாட்னா: பீகாரில் சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக - நிதிஷ் குமாரின் என்.டி.ஏ கூட்டணியே வெற்றி பெறும் என கணித்துள்ள நிலையில், ஜர்னோ மிரர் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவின் மகாபந்தன் கூட்டணியே வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
மகாபந்தன் கூட்டணி 130 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், என்.டிஏ கூட்டணி 100 - 110 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, ஆளுங்கட்சி மீதான அதிருப்தி போன்ற காரணங்களால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

பீகாரில் ஆட்சி மாற்றம்
244 சட்டசபை தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான நிதிஷ் குமார் - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) மற்றும் காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவின் மகாபந்தன் கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு புறமும் என மும்முனை போட்டி நிலவியது.
இன்று மாலை 6 மணியுடன் பீகார் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அதனை தொடர்ந்து கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் ஜர்னோ மிரர் வெளியிட்டுள்ள (journo mirror) கருத்துக்கணிப்பு முடிவில் மகாபந்தன் (MGB) கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது.
எத்தனை இடங்களை பெறும்
மற்ற கருத்துக் கணிப்புகளின் முடிவுகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இந்த முடிவு பார்க்கப்படுகிறது. தற்போது ஆட்சியில் உள்ள நிதிஷ் குமார் எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்படுவார் என்றும், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதையே இந்த கருத்துக்கணிப்பு முடிவு காட்டுகிறது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி, 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் மகாகத்பந்தன் கூட்டணி 130 முதல் 140 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும்.
அதாவது பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களை விட அதிகமாகப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கி எறியப்படும் என்றே கணித்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 100 முதல் 110 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
Journo Mirror கருத்துக்கணிப்பு முடிவுகள்:
* என்.டி.ஏ கூட்டணி: 100 - 110 தொகுதிகள்
* இந்தியா கூட்டணி: 130 முதல் 140 தொகுதிகள்
* மற்றவை: 0 முதல் 3 தொகுதிகள்
தேஜஸ்வி யாதவின் பிரசாரம்
அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) 3 முதல் 4 இடங்களையும், மற்ற சிறிய கட்சிகள் 0 முதல் 3 இடங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மற்ற கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எளிதான வெற்றியை பெறும் என கணித்துள்ள நிலையில் ஜர்னோ மிரரின் கருத்துக்கணிப்பு முடிவு இதற்கு நேர்மாறாக உள்ளது.
இதற்கு சில காரணங்களையும் வெளியிட்டுள்ளது. அதாவது, ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை, வேலைவாய்ப்புன்மை, மற்றும் விவசாயிகளின் துயரம் போன்ற காரணிகள் வாக்காளர்களைப் பெரிதும் பாதித்துள்ளதாகவும், இதேபோன்று, தேஜஸ்வி யாதவின் இளைஞர்களை மையமாகக் கொண்ட வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலத் திட்டங்கள் இளம் வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.
கருத்துக்கணிப்பு உண்மையாகுமா?
TIF ரிசர்ச், சாணக்கியா ஸ்ட்ராடஜிஸ் மற்றும் பீப்பிள்ஸ் இன்சைட் போன்ற நிறுவனங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி 130 முதல் 160 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என கணித்து இருந்தன. எப்படி இருந்தாலும் இவை அனைத்தும் கணிப்புகள் தான். இதேபோல் கருத்துக்கணிப்பு முடிவுகளும் சில தேர்தல் முடிவுகளில் தவிடுபொடியாகியுள்ளது.
எனவே தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வெள்ளிக்கிழமை தான் உண்மையாக யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது திட்டவட்டமாக தெரியவரும். ஒருவேளை ஜர்னோ மிரர் கணிப்புகள் உண்மையானால், பீகாரில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாபந்தன் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications