காதலனுடன் பேச.. ரூ.1.50 லட்சம் ஐபோன் கேட்டு அடம்பிடித்த சிறுமி.. பெற்றோர் மறுத்ததால் விபரீத முடிவு
பாட்னா: பீகாரில் தனது காதலனுடன் பேசுவதற்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஐபோன் வாங்கி தரவில்லை என்ற வருத்தத்தில் சிறுமி ஒருவர் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் மங்கர் பகுதியை சேர்ந்தவர் சிறுமி. இவரது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. இந்த சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர்கள் 2 பேருக்கும் இடையே முதலில் சாதாரணமான பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த காதல் இருவரின் குடும்பத்துக்கும் தெரியவில்லை. அவர்கள் ரகசியமாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே தான் சிறுமி மீது குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்தது.

இந்த சந்தேகத்துக்கு முக்கிய காரணம் என்பது சிறுமி அடிக்கடி தனக்கு என்று செல்போன் கேட்டு வந்தது தான். செல்போன் என்றால் சாதாரணது அல்ல. ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஐபோன் வாங்கி தர வேண்டும் என்று தனது பெற்றோரிடம் கேட்டு அடம் பிடித்து வந்துள்ளார். கடந்த 3 மாதமாக அவர் தனது பெற்றோரிடம் ஐபோன் கேட்டு வந்தாலும் கூட அவர்கள் வாங்கி கொடுக்கவில்லை.
தங்களின் ஏழ்மை நிலையை எடுத்து கூறினர். ஆனாலும் சிறுமி கேட்பதாக இல்லை. இதற்கிடையே தான் சிறுமி தொடர்ந்து ஐபோன் கேட்ட நிலையில் இப்போது என்ன அவசரம்? கொஞ்ச காலத்துக்கு பிறகு வாங்கி கொள்ளலாம் என்று தாய் கூறியுள்ளார். அதற்கு சிறுமி, ‛‛நான் ஒருவரை காதலித்தேன். 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். குடும்பத்துக்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டேன். ஐபோன் இருந்தால் பேசிக்கொள்வோம்'' என்று கூறியுள்ளார்.
இதை கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்தார். மேலும் சிறுமியை கண்டித்ததோடு, ஐபோனும் கிடையாது. ஒன்றும் கிடையாது என்று திட்டினார். இதனால் கோபமான சிறுமி தனது வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை பூட்டினார். அதன்பிறகு பிளேடை எடுத்து தனது கையின் பல இடங்களில் கீறினார். மணிக்கட்டையும் வெட்டினார். கையில் இருந்து ரத்தம் வடிந்தது. சிறுமி கதறி அழுதாள்.
இதனால் பதறிப்போன சிறுமியின் தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து சிறுமியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த சிறுமி நலமாக உள்ளார். கை, மணிக்கட்டில் ஆழமாக வெட்டு விழவில்லை. இதனால் சிறுமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி,‛‛எனது காதலன் இன்னும் படிப்பை முடிக்கவில்லை. படித்து கொண்டு தான் இருக்கிறார். இதனால் அவரிடம் பணம் இல்லை. என்னாலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள ஐபோன் கேட்டேன். வாங்கி தராததால் கையை அறுத்து கொண்டேன்''என்று கூறினார்.
இதையடுத்து போலீசார் சிறுமிக்கு அட்வைஸ் கொடுத்தனர். தற்கொலை என்பது எதற்கும் தீர்வு அல்ல என்று சிறுமியிடம் எடுத்து கூறினர். அதனை கேட்ட சிறுமி, ‛‛இனி இதுபோன்று தற்கொலை செய்யும் முடிவை எடுக்கமாட்டேன்'' என்று தெரிவித்தார். இதுபற்றி சிறுமியின் தாய் கூறுகையில், ‛‛எங்களின் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. இப்படி இருக்கும்போது எப்படி ஐபோன் வாங்கி கொடுக்க முடியும்? என் கணவர் கூலி தொழிலாளி. அவரது சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறோம்''என்றார்.












Click it and Unblock the Notifications