பொம்மை என பாம்பை கடித்து துப்பிய ஒரு வயது குழந்தை.. செத்துப்போன ‛ஸ்நேக்’.. குழந்தைக்கு என்னாச்சு?
பாட்னா: வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த ஒரு வயது ஆண் குழந்தை பொம்மை என நினைத்து அங்கு வந்த பாம்பை கடித்து துப்பியது. இதில் அந்த பாம்பு செத்துப்போன நிலையில் குழந்தை எந்த காயமும் இன்றி தப்பிய தகவல் வெளியாகி உள்ளது.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என சொல்வது உண்டு. இதற்கு ஏற்றாற்போல் நம்மில் பலரும் பாம்பை கண்டு பயந்து ஓடுவது உண்டு. ஆனால் இன்னொரு தரப்பினர் பாம்பை கண்டால் பயப்படாமல் அதனை விரட்டி விரட்டி தீர்த்து கட்டி விடுவார்கள்.

ஆனால் பீகாரில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது பொம்மை என நினைத்து ஒரு வயது குழந்தை பாம்பை பிடித்து கடித்து துப்பியதும், அதில் அந்த பாம்பு இறந்த நிலையில் குழந்தை எந்தவித காயமும் இன்றி தப்பித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
பீகாரின் கயா மாவட்டம் ஜமுஹர் கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று குழந்தை வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்தது. மொட்டை மாடியின் தரையில் அமர்ந்தபடி அந்த குழந்தை தனக்கான விளையாட்டு பொம்மைகளுடன் விளையாடியது. அப்போது மாடியில் திடீரென்று பாம்பு வந்தது. இந்த பாம்பு குழந்தையை நெருங்கியது.
அப்போது அந்த குழந்தை பாம்பை எடுத்து விளையாட்டு பொருள் என நினைத்து கடித்தது. இதில் பாம்பின் உடலில் காயம் ஏற்பட்ட நிலையில் அந்த பாம்பு இறந்தது. இதற்கிடையே அங்கு குழந்தையின் தாய் மொட்டை மாடிக்கு சென்றார். அருகே பாம்பு கிடப்பதை பார்த்து அதிர்ந்த தாய் உடனடியாக குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்து ஓடினார். வீட்டில் இருந்தவர்களை அவர் மாடிக்கு அழைத்து சென்றார்.
அப்போதும் பாம்பு நகரவில்லை. அருகே சென்று பார்த்தபோது தான் பாம்பின் உடலில் கடித்த தடம் இருப்பதும், அந்த பாம்பு செத்து கிடந்ததும் தெரியவந்தது. மேலும் அப்போது தான் அந்த தாய் ஒன்றை உணர்ந்தார். தனது மகன் கடித்ததில் தான் பாம்பு செத்ததை அறிந்தார். இதனால் பதறிப்போன அந்த தாய் தனது மகனை தூக்கி கொண்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.
Boy from Bihar bites snake to death. Doctors declare him safe. Snake association demands justice. pic.twitter.com/6xjErC7f5H
— Dr. Ajayita (@DoctorAjayita) August 21, 2024
அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது குழந்தையை பாம்பு கடிக்கவில்லை எனவும், குழந்தை நலமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் குழந்தை கடித்த பாம்பின் போட்டோவை அவர்கள் டாக்டர்களிடம் காண்பித்தனர். அப்போது அந்த பாம்பு நீளமாகவும், அளவில் மிகவும் சிறியதாகவும் இருந்தது.
இதனால் தான் ஒரு வயது நிரம்பிய குழந்தையால் அந்த பாம்பை கடிக்க முடிந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பாம்பை பார்த்த டாக்டர்கள், ‛‛குழந்தை கடித்த பாம்புக்கு விஷம் கிடையாது. இந்த பாம்பு மழைக்காலத்தில் அதிகம் நடமாடும். பாம்பு சிறுவனை கடிக்கவில்லை. சிறுவன் தான் பாம்பை கடித்துள்ளான்'' என்றனர். இதனால் குழந்தையின் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதற்கிடையே தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது. அதாவது சிறுவன் பெண் ஒருவரின் இடுப்பில் அமர்ந்து இருக்க செத்த பாம்பின் போட்டோவை குழந்தையிடம் காண்பித்து வாயை திறக்க சொல்கின்றனர். ஆனால் அந்த குழந்தை இறுக்கமாக வாயை மூடிக்கொண்டு போஸ் கொடுக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த குழந்தை தான் அந்த பாம்பை கடித்து கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications