சினிமாவை மிஞ்சும் சம்பவம்! பட்டப்பகலில் துப்பாக்கியுடன் நகைக்கடையில் கொள்ளை.. போலீஸ் என்கவுண்டர்
பாட்னா: பீகாரில் பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து ரூ.26 கோடி மதிப்பிலான நகைகளை மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். இதில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் வகையில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் ஆராவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இன்று மதியம் துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள் சிலர் தனிஷ்க் நகைக்கடைக்குள் புகுந்திருக்கிறார்கள். உள்ளே வந்த அவர்கள் 2 டீமாக பிரிந்து, ஒரு குழு கடையில் இருந்த பொதுமக்களை பணய கைதிகளாக வைத்திருக்கிறது. இரண்டாவது குழு நகைகளை கொள்ளையடித்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் 8-10 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இவர்கள் கொள்ளையடித்த நகைகளின் மதிப்பு சுமார் ரூ.26 கோடி என்று போலீசார் கூறுகின்றனர்.
சம்பவத்தையடுத்து கொள்ளையர்களை துரத்தி பிடிக்க காவல்துறையினர் முயன்றனர். இந்த முயற்சியில் 2 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், சுயநினைவு திரும்பியவுடன் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போஜ்பூர் எஸ்பி, ஆய்வு செய்துள்ளார்.
கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மக்களை மிரட்டியது கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன. சம்பவத்தின் போது கடையில் வேலை செய்த ஊழியர்கள் காவல்துறையை அழைத்ததாகவும், ஆனால் காவலர்கள் உடனடியாக வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இத்தனைக்கும் நகை கடைக்கும் காவல் நிலையத்திற்கும் வெறும் 600 மீ தொலைவுதான் இருந்தது என்றும், ஆனால் காவலர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பி சென்றுவிட்டனர் எனவும் நகைக்கடை ஊழியர்கள் கூறியுள்ளனர். காவல்துறை மெத்தனமாக செயல்பட்டது உண்மைதான் என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பீகாரில் பட்டப்பகலில் சுமார் ரூ.26 கோடி மதிப்பிலான நகைகள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications