பீகாரில் பாஜகவின் ஆட்டம் .. நிதிஷ் ஆதரவு 32 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய போகிறாரா சபாநாயகர்?
பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியின் 32 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதில் சபாநாயகரான பாஜகவை சேர்ந்த விஜயகுமார் திடீரென தீவிரம் காட்டுவதால் அம்மாநில அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது பாஜகவை சேர்ந்த சபாநாயகர் விஜயகுமார், கூட்டணி கட்சி அரசு என்றும் பார்க்காமல் நிதிஷ்குமார் தலைமையிலான அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனாலேயே பாஜக-ஜேடியூ இடையேயான விரிசல் அதிகரித்தது. பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்ததற்கும் விஜயகுமார் மிக முக்கிய காரணகர்த்தார்.

இப்போது ஜேடியூ, ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளது. முதல்வராக நிதிஷ்குமார், துணை முதல்வராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டனர். இப்புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஆகஸ்ட் 15-ல் பதவியேற்க உள்ளது.
பீகாரில் புதிய ஆட்சி அமைந்ததும் சபாநாயகரை மையப்படுத்தி அரசியல் நகர்வுகள் பரபரப்படைந்து வருகின்றன. ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ்-இடதுசாரிகள் அடங்கிய மெகா கூட்டணியின் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், சபாநாயகர் விஜயகுமார் மீது அதிருப்தி தெரிவித்து இ மெயில் அனுப்பி உள்ளனர். புதிய அரசாங்கம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னர், சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய மெகா கூட்டணி எம்.எல்.ஏக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாகவும் நிதிஷ்குமாரின் புதியா ஆட்சிக்கு நெருக்கடி தரும் வகையிலும் சபாநாயகர் விஜயகுமார் தரப்பு களமிறங்கி உள்ளது. பீகார் சட்டசபையில், சிறப்பு ஆயுதப் படை போலீஸ் சட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடும் அமளி மற்றும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறைகளில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும் பாஜகவை சேர்ந்தவருமான ராம் நாராயண் மண்டல், சபாநாயகரிடம் புதியதாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அறிக்கையின்படி ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் 32 பேரை சபாநாயகர் விஜயகுமார் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியின் 32 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சட்டசபையில் நிதிஷ்குமார் அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் பீகாரில் பரபரப்பு தொடருகிறது.












Click it and Unblock the Notifications