மாத பென்ஷன் தொகை அதிரடி உயர்வு.. நெருங்கும் சட்டசபை தேர்தலையொட்டி நிதிஷ் குமார் அறிவிப்பு
பாட்னா: பீகாரில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கணவரை இழந்த பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பென்ஷன் தொகையை ரூ.400ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி அறிவித்துள்ளார்.
பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். விரைவில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

வரும் அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதத்தில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
அதேபோல் காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்க வாய்ப்புள்ளது. இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளதால் அங்கு அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
பீகாரில் சமூக பாதுகாப்பு பென்ஷன் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கணவரை இழந்த பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.400 பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பென்ஷன் தொகையை ரூ.1,100 ஆக உயர்த்தி அவர் அறிவித்தார்.
இதுதொடர்பாக நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛சமூக பாதுகாப்பு பென்ஷன் திட்டத்தில் பலன் பெறும் கணவரை இழந்த பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த செய்தியை சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த திட்டத்தில் இப்போது அவர்கள் மாதம் ரூ.400 பென்ஷன் பெறுகின்றனர். இதனை ரூ.1,100 ஆக அதிகரித்துள்ளேன். அனைத்து பயனாளிகளுக்கும் இந்த உயர்த்தப்பட்ட பென்ஷன் தொகை ஜூலை மாதம் 10ம் தேதி கிடைக்கும். இதன்மூலம் மாநிலத்தில் 1 கோடியே 9 லட்சத்து 255 பேர் பயன்பெறுவார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி பீகாரின் துணை முதல்வர் சாம்ரத் சவுத்ரி கூறுகையில், ‛‛இன்று வரலாற்றில் முக்கியமான நாள். கணவரை இழந்த பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பென்ஷன் தொகையை முதல்வர் உயர்த்தி அறிவித்துள்ளார். முதல்வருக்கு நன்றி'' என்று கூறியுள்ளார். பீகாரில் நிதிஷ் குமார் தனது கூட்டணியை அடிக்கடி மாறி முதல்வராகி வருகிறார்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட்டு முதல்வரானார். அதன்பிறகு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்து முதல்வரானார். இதனால் நிதிஷ் குமார் மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த அதிருப்தியை சரிசெய்து தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக நிதிஷ் குமார் இந்த பென்ஷன் தொகையை உயர்த்தி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.












Click it and Unblock the Notifications