பாஜக கூட்டணியில் புகைச்சல்.. தொகுதி பங்கீட்டில் சமரசம் செய்து கொள்ளாத கட்சிகள்! பீகார் தேர்தல் பரபர
பாட்னா: "கூட்டணி கட்சிகளுக்கு எதிராக எங்களை கத்தியை தூக்க வச்சுடாதீங்க. நாங்க கேட்கிற கொஞ்ச தொகுதியை எங்களுக்கு கொடுங்க" என பாஜக கூட்டணியில் உள்ள ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி எச்சரித்துள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் புகைச்சல் கிளம்பியிருக்கிறது.
பீகாரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருக்கிறது. முதலமைச்சராக நிதிஷ்குமார் தொடர்கிறார். நவ.22ம் தேதியுடன் பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைவதால், அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் மும்முனை போட்டி நிலவுகிறது.

1. நிதிஷ்குமார் தலைமையிலான பாஜகவை உள்ளடக்கிய என்டிஏ கூட்டணி
2. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான காங்கிரஸை உள்ளடக்கிய மகாபந்தன் கூட்டணி
3. தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி
பாஜகவின் திட்டம்
என்டிஏ கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இருக்கின்றன. மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க குறைந்தது 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் அதிகமாக தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருக்கின்றன. கடந்த முறை பாஜக 110 தொகுதிகளில் போட்டியிட்டு 74 இடங்களை கைப்பற்றியிருந்தது. ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
கூட்டணி கட்சிகளின் கோரிக்கை
இந்நிலையில் இந்த முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளும் திட்டமிட்டிருக்கின்றன. இந்நிலையில், இந்த கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 15 தொகுதிகளை கேட்டிருக்கிறது. கடந்தமுறை 7 தொகுதிகளில் போட்டியிட்ட 4ல் இக்கட்சி வெற்றி பெற்றிருந்தது. எனவே இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டிருக்கிறது. ஆனால் பாஜக இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த முறை ஒதுக்கிய 7 தொகுதிகள் அதிகம். இந்த முறை போனால் போகட்டும் என அதே அளவுக்கு தொகுதியை ஒதுக்குகிறோம் என்று கூறி வருகிறது.
பாஜக மீது விமர்சனம்
இந்நிலையில் மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி, மகாபாரத காவியத்தில் வரும் துரியோதனனுடன் பாஜகவை ஒப்பிட்டு விமர்சித்துள்ளார். பாண்டவர்களுக்கு ஒரு சிறு கிராமத்தையும் கூட கொடுக்க மறுத்த துரியோதனனைப் போல பாஜக இருப்பதாக மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
"நீதி அரை அளவே ஆனாலும், அதுவும் கிடைக்கவில்லை என்றால் அதிருப்திதான். எங்களுக்கு 15 கிராமங்களை மட்டும் கொடுங்கள். மீதமுள்ள நிலங்கள் அனைத்தையும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் பங்கில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துக்கொள்கிறோம். எங்கள் உறவினர்களுக்கு எதிராக வாள் எடுக்க மாட்டோம்" என்று ஒரு கவிதையை தனது x தளத்தில் பகிர்ந்து பாஜகவுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கூட்டணியில் புகைச்சல்
கடந்த 2015ல் இக்கட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. கட்சிக்கான அங்கீகாரம் தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும் எனில், கட்சி தேர்தல் அரசியலில் குறிப்பிட்ட அளவுக்கு வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஜிதன் ராம் மாஞ்சியை மத்திய இணையமைச்சராக்கி, தொகுதி பங்கீட்டில் பாஜக வாயடைக்க வைத்திருக்கிறது. இருப்பினும், தனது கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை கொடுத்தால் கட்சி போட்டியிடும். இல்லையெனில் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டோம். வெளியிலிருந்து என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளிப்போம் என்று கூறியிருக்கிறார். இதனால் பாஜக கூட்டணியில் புகைச்சல் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications