வலையில் விழும் நிதிஷ்? பீகாரில் முதல்வர் யார்.. மாஸ்டர் பிளானுடன் பின்னணியில் பாஜக போடும் கணக்கு
பாட்னா: பீகாரில் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்ப ஆயத்தமாகிவிட்டதாக பேச்சு எழும் நிலையில், பீகார் முதல்வர் பதவிக்கு ரேனு தேவியை தேர்வு செய்யலாமா என்பது குறித்து பாஜக மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதுதான் ஒரே இலக்கு என்ற முனைப்புடன் இந்தியா கூட்டணி உருவானது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி என எதிரும் புதிருமாக போட்டியிட்ட கட்சிகள் கூட இந்தியா கூட்டணியில் ஐக்கியமாகின. 28 கட்சிகள் இணைந்து இதுவரை 4 கட்டங்களாக ஆலோசித்தன. இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்ததில் நிதிஷ் குமாருக்கு முக்கிய இருந்தது.

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியை அமைத்த நிதிஷ் குமார், அங்கு கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறார். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளருக்கு கூட நிதிஷ் முன்னிறுத்தப்படலாம் என பேச்சுக்கள் எழுந்தது. ஆனால், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதனால், நிதிஷ் குமார் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட ஒரு அறிவிப்பு இந்தியா கூட்டணியை கலங்கடித்தது. மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் பஞ்சாபில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று நிதிஷ்குமாரும் அணி மாற தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜகவுடன் கை கோர்த்து செயல்பட நிதிஷ் குமார் ஆயத்தமாகி வருவதாகவும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக ராஷ்ட்ரிய ஜனதா தளமும் நிதிஷ்குமாரை விமர்சித்தது.
கடுமையாக விமர்சித்த பாஜக தற்போது நிதிஷ்குமார் குறித்து கருத்து எதையும் கூறவில்லை. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து வெளியேறினால் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்பாரா? அல்லது சட்ட சபை கலைக்கப்படுமா என பீகார் அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கும் விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது.
இதற்கிடையே, பீகார் முதல்வராக ரேணு தேவியை தேர்வு செய்ய பாஜக ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது. ரேணு தேவி தலித் என்பதோடு பெண் என்பதால் பெண் வாக்காளர்களை கவரும் விதமாக பாஜக இந்த நடவடிக்கையை எடுக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுக்கள் ஒருபக்கம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க நிதிஷ் குமார் தனது எம்.எல்.ஏக்களை பாட்னா இல்லத்திற்கு அழைத்துள்ளார்.
அதேவேளையில், லாலு பிரசாத் யாதவும் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை அதாவது 122-ஐ தொட்டு விட முடியுமா என்பது குறித்து தீவிர ஆலோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 242 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவையில் தற்போது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 79 எம்.எல்.ஏக்களும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏக்களூம், காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பாஜகவுக்கு 78 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications