“தனியே தன்னந்தனியே” தாமரை -மகாராஷ்டிராவில் பிடித்ததை பீகாரில் இழக்கும் பாஜக.. ரிப்பீட்டாகும் ஆபரேசன்
பாட்னா: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக்கி பாஜக கூட்டணி ஆட்சியை நிறுவிய நிலையில், பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மகராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் குஜராத்தில் உள்ள விடுதியில் முகாமிட்டனர். அதன் பின்னர் அசாமில் உள்ள விடுதியில் அவர்கள் தங்கினர்.
இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட்டார்.
ஆட்சியை காப்பாற்றுவதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாததால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

பாஜக கூட்டணி அரசு
இதனை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியமைத்தது. ஆனால், அமித்ஷாவின் யோசனைபடி ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தார் தேவேந்திர பட்னவிஸ். இன்று மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அதிர்ச்சி கொடுத்த நிதீஷ்
இந்த கொண்டாட்டத்தை அனுபவிப்பதற்கும் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார். மத்திய அரசின் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பங்கேற்கவில்லை.

மோடி, அமித்ஷா கூட்டங்கள் புறக்கணிப்பு
சில வாரங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அளித்த பிரிவு உபசார விழாவின்போது அளித்த விருந்தையும் நிதீஷ் குமார் புறக்கணித்தார். அதேபோல் அமித்ஷா நடத்திய முதலமைச்சர்கள் கூட்டத்திலும் நிதீஷ் குமார் பங்கேற்காமல் அமைச்சரையே அனுப்பி வைத்தார். ஒரே மாதத்தில் பிரதமரின் 2 நிகழ்ச்சிகளை கூட்டணி கட்சியை சேர்ந்த முதலமைச்சரே புறக்கணித்து இருப்பதற்கு விரிசலே காரணம் என்று கூறப்பட்டது.

மோதலுக்கான காரணம்
பாஜகவை சேர்ந்த பீகார் சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா, ஆளும் அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பியது, பீகார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது பாஜகவுக்கு 9ல் ஒரு இடத்தை மட்டுமே ஜேடியு வழங்கியது, ஒரே நாடு ஒரே தேர்தல், அக்னிபாத் திட்டங்களை நிதீஷ் குமார் எதிர்த்து வருவது, நிதீஷுக்கு நெருக்கமான முன்னாள் துணை முதல்வரும் பாஜக பிரமுகருமான சுஷில் மோடியை பீகார் அரசியலிலிருந்து தேசிய அரசியலுக்கு மாற்றியது, நிதீஷிடம் கேட்காமல் ஆர்.சி.பி. சிங்கிற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கியது போன்ற பல விசயங்கள் மோதலுக்கான காரணமாக முன்வைக்கப்படுகின்றன.

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
பல மாதங்களாக மறைக்கப்பட்டு வந்த கூட்டணி மோதல் தற்போது வெட்டவெளிச்சமாகி நிற்கும் நிலையில், காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் சிறு கட்சிகள், பாஜகவுடனான உறவினை நிதீஷ் குமார் முறித்துக்கொண்டால் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவுக் கரத்தை நீட்டுவதாக அறிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து இன்று ஐக்கிய ஜனதா தளம் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நிதீஷ் குமார் கூட்டுகிறார்.

ரிப்பீட்டாகும் வரலாறு
கடந்த 2015 பீகார் தேர்தலின்போது காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் வென்றன. இதனையடுத்து நிதிஷ் குமார் முதலமைச்சராகவும் லாலு மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேஜஸ்வி பதவி விலக மறுத்ததால் நிதீஷ்குமார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர் பாஜக ஆதரவளித்ததால் அங்கு ஜேடியு - பாஜக கூட்டணியில் நிதீஷ் குமார் முதலமைச்சரானார். அதே தற்போது இந்த வரலாறு ரிப்பீட் ஆகிறது.












Click it and Unblock the Notifications