என்னது நிதிஷ்குமார் ரிட்டர்னா? கூட்டணியின் கதவுகளை எப்போதோ மூடிவிட்டோம்: பாஜக திட்டவட்டம்
பாட்னா: பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ்குமார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்பினாலும் சேர்த்து கொள்ளமாட்டோம் என பாஜக எம்பி சுஷில் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்வைத்து காங்கிரஸை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியை உருவாக்கியதில் முதன்மை பங்கு வகித்தவர் நிதிஷ்குமார். அத்துடன் பீகார் மாநிலம் பாட்னாவில் முதலாவது எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருந்தார் நிதிஷ்குமார். இதன்பின்னர் பெங்களூரில் 2-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பெங்களூர் ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு "இந்தியா" என பெயரிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் மும்பையில் எதிர்க்கட்சிகளின் 3-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளிடையேயான பொது செயல் திட்டம், தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தேசிய அளவில் பாஜகவினருக்கு "இந்தியா" கூட்டணி மிகப் பெரும் சவாலாகவும் உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் "இந்தியா" கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் வகையில், நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்புவார்; எந்த நேரத்திலும் பாஜக கூட்டணியில் நிதிஷ்குமார் இணைவார் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியிருந்தார்.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயின் இக்கருத்தை பாஜக எம்பி சுஷில் மோடி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இது தொடர்பாக சுஷில் மோடி கூறியதாவது: நிதிஷ்குமாரே பாஜக கூட்டணிக்கு வர விரும்பினாலும் பாஜக அவரை சேர்க்க தயாராகவும் இல்லை. முதலில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் அல்ல. அவர் ஒரு மத்திய அமைச்சர் அவ்வளவுதான். நிதிஷ்குமார் குறித்து ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. நிதிஷ்குமாருக்கான பாஜகவின் கதவுகள் எப்போதோ மூடப்பட்டுவிட்டன. எங்களைப் பொறுத்தவரை நிதிஷ்குமார் ஒரு கூடுதல் சுமை. கடந்த பீகார் தேர்தலில் பிரதமர் மோடி மட்டும் வராமல் போயிருந்தால் நிதிஷ்குமாரால் 44 இடங்களில் கூட ஜெயித்திருக்கவும் முடியாது. இதுதான் யதார்த்தம். தேர்தல் அரசியலில் ஓட்டுகளைத் தக்க வைப்பது என்பதுதான் மிக முக்கியமானது. நிதிஷ்குமாருக்கோ ஐக்கிய ஜனதா தளத்துக்கோ அப்படியான ஒரு வாக்கு வங்கி எதுவும் இல்லை. இவ்வாறு சுஷில் மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications