மோடி சொத்து சேர்த்து வைத்திருக்கிறாரா? யாருக்காக..? பொங்கிய அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாட்னா: மோடியின் நேர்மை குறித்து ஒருவரும் கேள்வி எழுப்ப முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காட்டமாக விமர்சித்துள்ளார்.
ரபேல் விவகாரம் மத்திய அரசுக்கு மீண்டும் கடும் பிரச்சனையாக மாறி வருகிறது. இந்த விவகாரத்தில் மோடியை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

அதற்கு பதிலடி தரும் விதமாகவே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:எனது அரசியல் வாழ்க்கையில் அடிப்படையற்ற குற்றச் சாட்டுகளை நான் ஒரு போதும் கூறியதில்லை. வார்த்தைகளை உபயோகிப்பதிலும், கண்ணியத்தை காப்பதிலும் எப்போதும் கவனமாக இருப்பேன்.
அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டுமா?. மோடி சொத்துக்களை குவித்து வைத்துள்ளார் என்றால், அது யாருக்காக? அவரது மனைவி, குழந்தைகளுக்காகவா?
யாருக்காக அவற்றையெல்லாம் தரப் போகிறார்?. எதிர்க்கட்சிகளின் விஷமப் பிரசாரம் என்னை வெகுவாக காயப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை நீண்ட காலமாக தெரியும். எனவே, அவரின் நேர்மை, நோக்கம் குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது.
மக்களுக்கு தவறான தகவல்களை அளித்து அரசியல் செய்யும் வேலையை எதிர்க்கட்சிகள் கைவிடவேண்டும். பிரதமர் மோடி உள்பட பாஜகவைச் சேர்ந்த எந்தவொரு தலைவர் மீதும் ஊழல் கறை படிந்ததில்லை.
மூத்த தலைவர் அத்வானிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அப்போது தமது பதவியை அவர் ராஜினாமா செய்ததே அதற்கு உதாரணம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications