பாஜகவிற்கு எதிராக பாட்னாவில் நாளை கூடும் எதிர்கட்சி தலைவர்கள்..பீகார் செல்லும் முதல்வர் ஸ்டாலின்
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவிற்கு எதிராக நாளை நடைபெற உள்ள எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பீகாருக்கு செல்கிறார். பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காலமெல்லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதலே மத்தியில் ஆட்சியில் உள்ளது பாஜக. மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. கடந்த முறை பாஜகவின் வெற்றிக்கு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், சுகாதார வளாகம் போன்றவை கை கொடுத்தது.

இந்த முறை வீடு வீடாக குழாய் அமைத்து ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லாது அனைத்து மாநிலங்களிலும் கணிசமான இடங்களை வெல்ல பாஜக வியூகம் அமைத்து வருகிறது. அதே நேரத்தில் பாஜகவைத் தோற்கடிக்க வலுவான கூட்டணியை உருவாக்க எதிர்கட்சியினர் முயற்சி செய்துவருகின்றனர். இதற்கான முதல் முயற்சியாக பீகார் மாநிலம், பாட்னாவில் நாளை 23ஆம் தேதி எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பீகார் செல்கிறார். பாட்னாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
தனது பீகார் பயணம் குறித்து திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், நன்றி தெரிவித்து நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்!
முத்தமிழறிஞர் பிறந்த திருக்குவளையும் அவர் வளர்ந்த திருவாரூரும் உடன்பிறப்புகளுக்குத் திருத்தலங்கள். அங்கே செல்வது என்றால் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் உற்சாகமும் புத்துணர்வும் ஏற்படும். உங்களில் ஒருவனான எனக்கும் அதே உணர்வுதான் எப்போதும் இருக்கும். நேற்று அந்த உணர்வு சற்று மிகுதியாகவே இருந்தது!
நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி அவர்கள் வருகை தந்து திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்ததுடன், இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் காப்பதற்கு முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்க்கை எப்படி துணையாக நின்று வழிகாட்டுகிறது என்பதை விளக்கினார். உடல்நலக்குறைவால் அன்பிற்குரிய பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் அவர்களால் வர இயலாவிட்டாலும், தன் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் உரையாக எழுதி, இந்திய அரசியல் களத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் இன்றும் எப்படி வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்பதை விளக்கியிருந்தார். அதன் தமிழாக்கத்தை திருச்சி சிவா எம்.பி., அவர்கள் உணர்வுபூர்வமாக உடன்பிறப்புகளிடம் எடுத்துரைத்தார்.

கலைஞர் கோட்டத்தைத் திறக்கின்ற பெரும் வாய்ப்பு எனக்கு வாய்த்த நிலையில், கோட்டத்தினைப் பார்வையிட்ட சிறப்பு விருந்தினர்கள், கழக நிர்வாகிகள் எல்லாரும் கண்கள் விரிந்திட, கலைஞரின் பேராற்றலைக் கண்டு வியந்தனர். 'சாதாரண மனிதர்களிடமிருந்துதான் ஒரு சகாப்தத்தின் விடிவுக்கான ஒளி கிளம்புகிறது' என்கிற தலைவர் கலைஞரின் பொன்மொழியே அவரது வாழ்க்கையாகவும் அவரது நூற்றாண்டு செய்தியாகவும் அமைந்திருப்பதை அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்கள் - ஆவணங்கள் வாயிலாக அறிகின்ற யார்தான் ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்?
கொள்கை வலிவும் இயக்க உணர்வும் பெருகிடத் திருவாரூர் திருத்தலத்தின் நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாடலிபுத்திரம் என வரலாற்றில் பெயர் பெற்ற பாட்னா நகருக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன்.
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நான் உரையாற்றியது போல, இந்தியாவைக் காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது. மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திடும். அதற்கான முன்னெடுப்பை பீகார் முதலமைச்சர் அன்பிற்குரிய நிதீஷ் குமார் மேற்கொண்டிருக்கிறார். ஜூன் 23ஆம் நாள் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காலமெல்லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன். இந்திய அரசின் ஒருமைப்பாட்டு உணர்வை - ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான இந்த முன்னெடுப்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல விளைவைத் தரும் என்ற நம்பிக்கை மிகுந்திருக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications