நிதீஷின் முதல்வர் கனவில் விழுந்த மண்.. பழி வாங்கிய சிராக் பஸ்வான்
பாட்னா: பீகார் தேர்தலில் பாஜக ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு பிறகு நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நிதீஷ்குமாருக்கு முதல்வர் பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சிராக் பஸ்வான். இவரது லோக் ஜனசக்தி மட்டும் தனித்து போட்டியிடாமல் பாஜக கூட்டணியில் இருந்திருந்திருந்தால் ஐக்கிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக இருந்திருக்கும்.
முதல் இடத்தை பெற்று முதல்வர் ஆவதில் நிதீஷ் சிக்கலை சந்தித்து இருக்க மாட்டார். ஆனால் அப்படியான நிலை இப்போது இல்லை. முதல்வர் பதவிக்காக பாஜக மேலிட உத்தரவுக்காக காத்திருக்கிறார்.
பீகாரை தட்டி தூக்கிய பாஜக.. முஸ்லீம் வாக்குகள்தான் காரணமா.. நிதிஷ்
243 தொகுதிகள்
பீகார் சட்டசபை தேர்தலில் 243 தொகுதிகளுக்குமான முடிவை தேர்தல் ஆணையம் இன்று அதிகாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. முன்னதாக பாஜக கூட்டணி நேற்று காலை முதல் மாலை வரை முன்னிலையில் இருந்தது. எனினும் பல தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் -பாஜக கூட்டணி இடையே குறைவான வாக்குகளிலேயே முன்னிலையில் இருந்தால் இரவில் நிமிடத்திற்கு நிமிடம் முன்னிலை நிலவரம் மாறிக்கொண்ட இருந்தது.
125 இடங்களில் வெற்றி
இதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு எழுந்தது இறுதியாக இன்று அதிகாலை வரை நீடித்த வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தது. பாஜக-ஜேடியூ கூட்டணி பீகாரில் 125 இடங்களில் வென்றது. ஆர்ஜேடி 75 இடங்களில் வென்றது. அதற்கு அடுத்தபடியாக பாஜக 74 இடங்களிலும் ஜேடியூ- 43 இடங்களிலும், காங். 19 இடங்களில் சிபிஐஎம்எல்-12 இடங்களிலும், மஜ்லிஸ் கட்சி- 5 இடங்களிலும், விஐபி-4 இடங்களிலும், ஆவாம் மோர்ச்சா-4 இடங்களிலும், சிபிஎம்-2, சிபிஐ-2 இடங்களிலும், எல்ஜேபி-1 இடத்திலும், பகுஜன் சமாஜ்-1 இடத்திலும், சுயேட்சை-1 இடத்திலும் வென்றனர்.
லோக் ஜனசக்தி கட்சி
இதில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும், இந்த அளவுக்கு தேர்தல் முடிவுகள் திகில் ஏற்படும் வகையில் சென்றதுக்கு முக்கிய காரணம் சிராக் பஸ்வான். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, பாஜக கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்காதால் விலகியது. ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தனித்து போட்டியிட்டார். அந்த கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஓட்டுக்களை பிரித்தார்
எனினும் கேட்ட தொகுதிகளை கொடுக்காமல் கழற்றிவிட்ட நிதீஷ் குமாரை சிராக் பஸ்வான் பழிவாங்கிவிட்டார். ஐக்கிய ஜனதா தளத்திற்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளை அவருடைய கட்சி பிரித்தது. பல தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் இந்த முறை தோற்பதற்கு சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி (எல்ஜேபி) காரணமாக இருந்தது.
பாஜக விட்டுக்கொடுக்காது
சிராக் மட்டும் தனித்து போட்டியிடாமல் இருந்திருந்தால் ஐக்கிய ஜனதா தளம் அதிக இடங்கள் பெற்று முதல் இடத்தை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் என்று அதன் மூத்த தலைவர்கள் சொல்கிறார்கள். சிராக் தனித்து போட்டியிட்டதால் பாஜக அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இம்முறை நிதீஷ் கூட்டணி வென்றாலும், முதல்வர் வேட்பாளர் பதவிக்காக பாஜகவின் மேலிட உத்தரவுக்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பாஜக, நிதீஷ் குமாருக்கு இந்த முறை முதல்வர் பதவியை விட்டுக்கொடுப்பது சந்தேகம் என்றே சொல்கிறார்கள்.