பீகாரில் திடீர் ட்விஸ்ட்! ஓரம் கட்டப்படும் பாஜக.. ஓங்கும் லாலு பிரசாத் கட்சியின் கை!
பாட்னா: கடந்த தேர்தலிலேயே ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைத்திருக்க வேண்டியது. ஆனால் அதிகமாக இடங்களை வென்றாலும், போதுமான இடங்களை வெல்லாததால் ஆட்சியமைக்க முடியவில்லை. இந்த தேர்தலில் இக்கட்சி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தெரிகின்றன. குறிப்பாக நிதிஷ்குமாரின் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்திருக்கிறார்கள்.
பீகாரில் தற்போது நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்கிறார். அவருடைய ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இது பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவ.22ம் தேதியுடன் நிறைவடைவதால், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவ.6, 11 என மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சி அமைக்க 222 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எனவே வெற்றிகான ரேஸில் கட்சிகள் முந்தி வருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி.க்கள் சந்தோஷ் குமார் குஷ்வாஹா மற்றும் ராகுல் சர்மா ஆகியோர் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இணைந்துள்ளனர். இது ஐக்கிய ஜனதா தளத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. முன்னாள் பூர்ணியா எம்.பி.யான சந்தோஷ் குஷ்வாஹா, "கட்சியின் அதிகாரப் பங்கீட்டில் நியாயமின்மையும், அடித்தள யதார்த்தத்துடனான தொடர்பின்மையும் தனது முடிவுக்குக் காரணம். தேஜஸ்வி யாதவின் தலைமை மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
தற்போது, ஐக்கிய ஜனதா தளம் ஒரு சிலரின் கைகளில் உள்ளது. இதன் தலைமைக்கு அடித்தள யதார்த்த அனுபவம் இல்லை. சுயமரியாதையில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்று கூறினோம். எங்கள் கோரிக்கைகள் எதுவும் கேட்கப்படவில்லை. தேஜஸ்வி யாதவின் தலைமையில் பீகார் முன்னேறும். நவம்பர் 14 அன்று தேஜஸ்வி யாதவ் தலைமையில் அரசு அமையும் என்றும் நான் நம்புகிறேன்" என்று சந்தோஷ் குமார் குஷ்வாஹா கூறியிருக்கிறார்.
இவர் கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பூர்ணியா லோக்சபா தொகுதியில் இருமுறை வெற்றி பெற்றார். ஆனால் 2024 இல் சுயேச்சை வேட்பாளர் பப்பு யாதவிடம் தோல்வியடைந்தார். கோஷி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான ராகுல் குமார், ஐக்கிய ஜனதா தளத்தை விட்டு வெளியேறியதற்கான காரணமாக, அரசின் பிரதிநிதிகள் மீது தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைக் குறிப்பிட்டார்.
"எங்கள் பகுதியில் பல சம்பவங்கள் நடந்தன. ஆனால் அரசின் பிரதிநிதிகள் அதற்கு கவனம் செலுத்தவில்லை. இவையனைத்தையும் பார்த்த பிறகு, கட்சியை விட்டு வெளியேறி ஒரு வலுவான மாற்றைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம். தேஜஸ்வி யாதவின் வேலைவாய்ப்புத் திட்டம் பயனுள்ளதாகத் தோன்றியதால், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்தோம்," என்று ராகுல் குமார் விளக்கினார். ராகுல் சர்மா கடந்த 2010 முதல் 2015 வரை ஜஹானாபாத் மாவட்டத்தின் கோஷி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார்.
இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி.யின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி இருக்கும். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, தீபங்கர் பட்டாச்சார்யா தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (சி.பி.ஐ-எம்.எல்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சி.பி.எம்) மற்றும் முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி (வி.ஐ.பி) ஆகிய கட்சிகள் இருக்கின்றன.
இது தவிர, பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சியும் மாநிலத்தின் 243 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. மும்முனை போட்டி இருந்தாலும் இந்த முறை ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியை கைப்பற்றும் என்று பலரும் ஆருடம் கூறி வருகின்றனர். அதற்கேற்றார்போல, தற்போது இக்கட்சியில் ஆளும் கட்சி தலைவர்கள் இணைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications