பீகார்: நேற்று, இன்று, நாளை.. ஒரு லட்சம் உயிர்களை பலி கொண்ட கலிங்கத்து போரும், அசோகரும்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அம்மாநிலம் கவனம் பெற்றிருக்கிறது. அரசியலை தாண்டி, பீகாரின் வரலாறு உள்ளிட்ட விஷயங்களை 'ஒன் இந்தியா தமிழ்' தொகுத்து வழங்கி வருகிறது. இந்த தொகுப்பில் இதற்கு முன்னர் பீகாரில் மௌரிய பேரரசு தோற்றம், சந்திரகுப்த மௌரியர் மரணம் பற்றி பேசியிருந்தோம். இன்று, மௌரிய பேரரசர் அசோகர் குறித்தும், அசோகரின் கலிங்கத்து போர் குறித்தும் பார்ப்போம்.
இந்தியாவின் முதல் பேரரசான மௌரிய பேரரசு காலத்தில் பௌத்தம் செழித்து வளர்ந்தது. இந்த பேரரசை உருவாக்க முக்கிய காரணமாக இருந்த சாணக்கியர் வேத மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் ஆட்சியில் வளர்ந்தது என்னவோ பௌத்தம்தான். குறிப்பாக அசோகர் காலத்தில் பௌத்தம் செழித்து வளர்ந்தது. இதற்கு காரணம் கலிங்கத்து போர்தான்.

சந்திரகுப்த மௌரியரின் வாரிசு
மௌரிய பேரரசின் முதல் மன்னனான சந்திரகுப்த மௌரியருக்கு பின்னர் அவரது மகன் பிந்துசாரர் (கி.மு. 273-297) ஆட்சிக்கு வந்தார். ஆனால் இவரால் தனது தந்தையை போல பெரிய அளவில் பெயர் எடுக்க முடியவில்லை. எனவே இவரை பற்றி பெரியதாக குறிப்புகள் ஏதும் இல்லை. ஆனால் இவருக்கு பின்னர் வந்த அசோகர் இந்தியாவின் மிகப்பெரிய அடையாளமாக உருவெடுத்தார். இவர் நடத்திய கலிங்கத்து போர் இன்றும் வரலாற்று ஆசிரியர்களால் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
கலிங்கத்து போர்
ஒடிசா மாநிலத்தில் உள்ள தய நதிக்கு அருகில், தௌலி மலைகளில் இந்த கலிங்கத்து போர் நடந்தது. கலிங்க நாட்டு மன்னனுக்கும் அசோக பேரரசருக்கும் இடையில் இந்த போர் ஏற்பட்டது.
இந்த போரில் ஒரு லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒன்றரை லட்சம் வீரர்கள் நாடு கடத்தப்பட்டனர். இதையெல்லாம் பார்த்த அசோகர் மனம் வெறுத்தார். போர், உயிர் பலி, ரத்த வாடை எல்லாவற்றையும் அவர் வெறுத்தார். அரசனுக்கு போர் புரிவதே அறம் என்று போதிக்கப்பட்ட காலம் அது. எனவேதான் நிலப்பரப்புக்காக ஒருவரை ஒருவர் அடித்து கொன்றுக்கொண்டனர். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கத்தானே செய்யும்? அப்படித்தான் இந்த போர்களுக்கும் ஒரு முடிவு வந்தது.
மனம் மாறிய அசோகர்
போர்களை அவர் நிறுத்தினார். இனி போர் செய்வதில்லை என்று முடிவெடுத்து பௌத்த மதத்திற்கு மாறினார். இந்த இடத்தில் சாணக்கியர் இருந்திருந்தால் சாபஷ் என சமுத்திரகனியை போல கைதட்டி மனம் வெந்திருப்பார். ஏனெனில் மௌரிய பேரரசுக்கு உழைத்து ஓடாக தேந்த அவரால் கடைசி வரை மௌரிய மன்னர்களை வேத மதத்தை நோக்கி அழைத்து வர முடியவில்லை. பௌத்த மதம் மாறிய அசோகர், நாடு முழுவதும் அதை பரப்புவும் செய்தார். சமய சடங்குகளை விட ஒழுக்கமான வாழ்க்கைதான் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.
பௌத்த தாக்கம்
அவரது தம்மம் என்ற கொள்கை, அகிம்சை, சகிப்புத்தன்மை, பெற்றோருக்கும் மூத்தோருக்கும் மரியாதை, பிற உயிர்களிடம் கருணை காட்டுதல் போன்ற அறநெறிகளை வலியுறுத்தியது. இந்த தம்மத்தைப் பரப்புவதற்காக, அவர் நாடு முழுவதும் தர்ம மகா மாத்திரர்கள் என்ற அதிகாரிகளை நியமித்தார். அசோகர், பௌத்த மதத்தின் பரவலுக்காகப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்காகத் தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், அவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஸ்தூபிகளையும், விகாரைகளையும் கட்டினார். சாஞ்சி ஸ்தூபி போன்ற முக்கியப் பௌத்த சின்னங்கள் இவரது காலத்தில் கட்டப்பட்டவைதான்.
இன்று இந்தியாவில் பௌத்த மதத்தின் ஆதிக்கம் இருக்கிறது எனில் அதற்கு காரணம் மௌரிய பேரரசுதான். அந்த வகையில் இந்தியாவின் பண்பாட்டு தளத்தில் அசோகர் உள்ளிட்ட மௌரிய பேரரசர்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications