தமிழகத்தில் குடும்ப அரசியல்.. பாஜகவின் மிகப்பெரிய சவால் இது.. பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆவேசம்!
பாட்னா: தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் குடும்ப அரசியல் தலைவிரித்து ஆடுவதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா விமர்சித்துள்ளார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பெரும்பான்மை எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இருந்து கூட்டணி ஒப்பந்தத்திற்காக முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமாருக்கு பாஜக வழங்கியது. இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் பாஜக இன்னும் வேர் விட பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிது.

காரியாலயா
அந்த வகையில் தலைநகர் பாட்னாவில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட பாஜக அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜேபி நட்டா, நமது கட்சியினர் ஒருபோதும் பாஜக அலுவலகம் என்று கூறமாட்டோம். இதை காரியாலயா என்று நாம் கூறுவோம். அலுவலகம் என்பது காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு மூடப்படும். ஆனால் காரியாலயா சித்தாந்த்தத்துடன் வாழும் உருவகம். இது ஒருபோதும் மூடப்படாது என்று தெரிவித்தார்.

குடும்ப அரசியல்
தொடர்ந்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளிலும் பல்வேறு மாநிலங்களிலும் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது. குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுவதே பாஜகவின் மிகப்பெரிய சவால் என்று தெரிவித்தார்.

கோ பேக் நட்டா
முன்னதாக நேற்று பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள பாட்னா பல்கலைக்கழகம் வந்த ஜேபி நட்டாவுக்கு, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு சார்பாக கொண்டு வரப்பட உள்ள புதிய கல்விக்கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் ஜேபி நட்டாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு கோ பேக் சொல்லி முழக்கங்களை எழுப்பினர்.

புதிய கல்விக் கொள்கை
பெரும் பாரம்பரியம் மிக்க பாட்னா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான ஜேபி நட்டாவுக்கு, அதே பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் படித்த பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்தவருக்கு இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாடு கடந்து பல்வேறு மாநிலங்களிலும் பரவி வருகிறது. பாஜக தரப்பில் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அக்கட்சி தேசிய தலைவருக்கு எதிராக மாணவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications