வயசோ 32.. அக்மார்க் 90s கிட்! ஐபிஎல் வீரர் - 2 முறை பீகார் துணை முதலமைச்சர்.. யார் இந்த தேஜஸ்வி?
பாட்னா: 2 வது முறையாக பீகாரின் துணை முதலமைச்சராக பதவியேற்று இருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் யார் என்பது குறித்த விரிவாக இந்த கட்டுரையில் அலசுவோம்.
தொடர்ந்து 2 வது முறையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றி, மாநில அரசுகளை ஆபரேசன் தாமரை என்ற பெயரில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, கிடைக்கும் பந்துகளில் எல்லாம் சிக்சர் விளாசிக் கொண்டிருந்தது பாரதிய ஜனதா கட்சி.
மகாராஷ்டிராவில் வெற்றிபெற்று நாட் அவுட் பேட்ஸ்மேனாக அடுத்தடுத்த மாநிலங்களில் சிக்சர் விளையாட தெம்போடு புறப்பட்ட பாஜகவை கிளீன் போல்டு செய்திருக்கிறார் தேஜஸ்வி யாதவ் என்ற பீகார் கிரிக்கெட் வீரர்.

தேஜஸ்வியின் ஃப்ரண்ட் ஃபூட்
ஆம், முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும் பாஜகவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் விரிவடைந்த உடனே தனது அரசியல் நகர்வுகளை எடுக்கத் தொடங்கிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ், பழைய கருத்து வேறுபாடுகள், பகைகளை மறந்து தாமதிக்காமல் உடனடியாக காங்கிரஸை சேர்த்துக்கொண்டு நிதீஷ் குமாருக்கு ஆதரவளித்த ஃபிரண்ட் ஃபூட் நகர்வே பாஜக கூட்டணியிலிருந்து நிதீஷ் குமார் துணிச்சலோடு வெளியேற முதன்மை காரணம்.

25 வயதில்..
கடந்த 2015 ஆம் ஆண்டு நிதீஷ் குமாரும் லாலு பிரசாத் யாதவும் தங்கள் அரசியல் பகைகளை மறந்துவிட்டு ஒன்றாக கூட்டணி அமைத்து காங்கிரஸையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு போட்டியிட்டனர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டனர். இதனையடுத்து நிதீஷ் குமார் முதலமைச்சராகவும் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். அப்போது அவருக்கு வயது வெறும் 26 தான்.

பறிபோன பதவி
அதன் பின்னர் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் மீதான மாட்டுத்தீவன ஊழல் வழக்கு வேகம் எடுக்கத் தொடங்கியது. இதில் குற்றம்சாட்டப்பட்ட தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என நிதீஷ் குமார் வலியுறுத்தினார். அதற்கு தேஜஸ்வி யாதவ் மறுப்பு தெரிவித்ததால் நிதீஷ்குமார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி அதன் பின்னர் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சரானார்.

விமர்சனங்கள்
லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை சென்றது, சரத் யாதவ் மோதல், ஆட்சி கவிழ்ப்பு போன்ற பிரச்சனைகளால் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டது. வாரிசு என்பதால் தேஜஸ்வி யாதவுக்கு இளம் வயதிலேயே கட்சிப்பதவி கிடைத்துவிட்டதாக பலர் குற்றம்சாட்டி வந்தனர். தேஜஸ்வியை விளையாட்டு பையன் என்று கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் விமர்சனங்கள் எழுந்தன.

தேர்ந்த அரசியல்வாதி
அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடியாக சதம் விளாசியதை போன்ற வெற்றியை 2020ல் பெற்றார் தேஜஸ்வி யாதவ். அந்த தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேஜஸ்வி யாதவ் கட்சி 79 இடங்களில் வென்றது. இதில் ஆட்சியை அமைக்க முடியாமல்போனாலும் அதிக தொகுதிகளை வென்ற கட்சி ஆர்.ஜே.டிதான். இதன் மூலம் தன்னை ஒரு அரசியல் ஆளுமையாக தேஜஸ்வி யாதவ் நிலைநாட்டினார்.

கிரிக்கெட் வீரர்
இந்த கட்டுரையின் தொடக்கத்திலிருந்தே கிரிக்கெட் தொடர்பான வார்த்தைகளை நாம் பயன்படுத்தி இருப்போம். ஏன் தேவையில்லாமல் இதுபோன்ற வார்த்தைகள் இதில் வருகின்றன என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கலாம். கிரிக்கெட்டும் அரசியலும் வேறில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், தேஜஸ்வி யாதவும் ஒரு தேர்ந்த கிரிக்கெட் வீரர்தான்.

விராட் கோலி தலைமையில்..
இளம் வயதிலேயே கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் கொண்ட அவர் டெல்லிக்கு சென்று பள்ளிப்படிப்புடன் கிரிக்கெட் பயிற்சியும் எடுத்தார். பள்ளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வான தேஜஸ்வி, 15 வயதுக்கு உட்பட்டோருக்கான டெல்லி அணிக்காக விளையாடினார். இவரது அந்த அணியின் கேப்டன் விராட் கோலி. அதில் இறுதிப்போட்டியில் இஷாந்த் ஷர்மாவுடன் கடைசி வரை நின்று தேஜஸ்வி யாதவ் அணியை வெற்றிபெற வைத்தார்.

ஐபிஎல் போட்டி
விளையாட்டுக்காக 10 ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய தேஜஸ்வி, 17 வயது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டெல்லி அணியிலும் விளையாடியுள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் அணி தேர்வுப்பட்டியலில் இவரது பெயரும் பரிசீலிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்ற இவருக்கு தனது திறமையை வெளிப்படுத்த ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

தோல்வி டூ வெற்றி
2009 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில அணிக்காக தேர்வான தேஜஸ்வி யாதவ், சையத் முஸ்தாக் அலி போட்டி, விஜய் ஹசாரே போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆனால், கிரிக்கெட்டில் அவரால் எதிர்ப்பார்த்த அளவுக்கு சாதிக்க முடியவில்லை. தோல்வியடைந்த கிரிக்கெட் வீரராக பார்க்கப்பட்ட தேஜஸ்வி, 2013 ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்து முழு நேர அரசியல்வாதியாக மாறி தனது கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று வருகிறார்.

இந்தியாவின் சக்திவாய்ந்த 90ஸ் கிட்
தேஜஸ்வி யாதவ் பிறந்தது 1989 நவம்பர் 9. அப்படி பார்த்தால் 90க்கு 2 மாதங்களுக்கு முன்பாக பிறந்த தேஜஸ்வியும் அக்மார்க் 90ஸ் கிட்தான். அதிக கூச்ச சுபாவம் கொண்டம் யாரிடமும் பேசாத இண்ட்ரோவெர்ட் சிறுவன் என்று பள்ளியில் அழைக்கப்பட்ட தேஜஸ்விதான் பீகாரின் இளம் துணை முதலமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தனது அழுத்தமான பேச்சுக்களால் மக்கள் மனதில் ஆழப்பதிந்த இவர் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் இந்தியாவின் சக்திவாய்ந்த 100 தலைவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications