கொரோனா தடுப்பூசி என்ன தேர்தல் லாலிபாப்பா?.. அது உயிர் காக்கும் மருந்தில்லையா?.. காங். விளாசல்
பாட்னா: பீகார் மாநிலம் முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக கூறுவது மக்களுக்கு அக்கட்சி வழங்கும் தேர்தல் லாலிபாப் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
கொரோனா ஊரடங்குக்கு பிறகு முதல்முறையாக பீகார் மாநிலத்தில் மிகப் பெரிய தேர்தலான சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இங்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
பீகாரில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்து ஜேடியு-பாஜக கூட்டணி ஒரு அணியாகவும் காங்கிரஸ் ஆர்ஜேடி இன்னொரு அணியாகவும் மோதுகின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளிலும் ஜேடியு- பாஜக கூட்டணியே மகத்தான வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
பீகார் பாஜக பாணியில் எடப்பாடியார் அறிவித்த ஒற்றை அறிவிப்பு.. சமூக வலைதளங்களில் பரபர விவாதம்
இலவச கொரோனா தடுப்பூசி
இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாட்னாவில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மாநிலம் முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும். 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்பன உள்ளிட்ட அறிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
கெட்ட எண்ணம்
இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறுகையில் கொரோனா தடுப்பூசியை தேர்தல் லாலிபாப் என கருதும் ஒரே கட்சி பாஜகதான். கொரோனாவுடன் பாஜகவின் கெட்ட எண்ணத்திற்கும் சிகிச்சை தேவை.
2 கோடி வேலைவாய்ப்பு
பீகார் மாநிலத்திற்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பாஜகவின் வாக்குறுதியானது, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ற முந்தைய வாக்குறுதியின் தம்பியாகும். இதில் இருக்கும் ஒரே சிக்கல் இருவரும் டெல்லி ரயில் நிலையத்தை விட்டு பாட்னாவுக்கோ நாட்டின் பிற பகுதிகளுக்கோ இன்னும் புறப்படவில்லை. இனி புறப்படவும் மாட்டார்கள் என்றார்.
பாஜகவிடம்
இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூறுகையில் கொரோனா தடுப்பூசி என்பது வெறும் பாஜகவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இது இந்தியாவுக்கும் சொந்தமானது என ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளது. 2022, 2023, 2024 வரை தேர்தல் நடைபெறாத மாநிலங்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என பாஜகவிடம் கிண்டலாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.