பீகார் இளைஞர்களுக்கு அடித்தது யோகம்.. 10 லட்சம் பேருக்கு அரசு வேலை.. நிதிஷ் குமார் அதிரடி அறிவிப்பு
பாட்னா: பீகாரில் சுதந்திர தின உரையின் போது முதல்வர் நிதிஷ் குமார், மாநிலத்தில் 10 லட்சம் அரசு வேலை வழங்கப்படும் என்றும், 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து மகாபந்தன் கூட்டணியை அமைத்து பீகாரின் முதல்வராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார்.
'கோவை குண்டு வெடிப்பு’ பாஜக பேரணியில் சர்ச்சையான முழக்கம்! பாஜகவினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு!
நிதிஷ் குமார் ஒப்புதல்
துணை முதல்வராக பொறுப்பேற்ற தேஜஸ்வி யாதவ் கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தனது கட்சி அளித்த வாக்குறுதியான 10 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ற வாக்குறுதி ஒருமாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று அண்மையில் தெரிவித்து இருந்தார். தனது கனவுத்திட்டத்திற்கு முதல்வர் நிதிஷ் குமாரும் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தார்.
10 லட்சம் பேருக்கு அரசு வேலை
இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து முதல்வர் நிதிஷ் குமார் மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார். தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிய நிதிஷ் குமார், வேலை வாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக நிதிஷ்குமார் கூறுகையில், "10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
20 லட்சம் வேலைவாய்ப்பு
கூடுதலாக அரசு மற்றும் தனியார் என பல்வேறு துறைகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த திட்டத்தில் வெற்றி பெற்றால், இந்த எண்ணிக்கை 20 லட்சமாக உயர்த்தப்படும். இந்த வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்த மாநில அரசு அனைத்து இடங்களில் கடுமையாக உழைக்கும்" என்றார். நிதிஷ்குமார் வேலைவாய்ப்பு குறித்த தனது திட்டத்தை அறிவித்ததையடுத்து, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
எங்கள் அரசு இதை நிறைவேற்றும்
இது குறித்து தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ''நிதிஷ்குமாரின் உண்மையான பிரச்சினை விவகாரத்தில் ஒரு மகத்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஊடகங்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த்த வேண்டும். எங்களின் இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி இதை நிறைவேற்றும்" என்றார். முன்னதாக 10 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ற தேஜஸ்வி யாதவின் அறிவிப்பை கேலி செய்து பாஜக விமர்சித்து வந்ததற்கு, ட்விட்டரில் ஒரு வீடியோ கிளிப் ஒன்று பதிவிட்டு பாஜகவின் விமர்சனங்களுக்கு பதிலளித்து இருந்தர்.
2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்னவானது
அந்த பதிவில், "இந்து -முஸ்லீம் என பேசிக்கொண்டு இருக்காமல், வேலை வாய்ப்பு பற்றி நீங்கள் (பாஜக) எங்களிடம் கேட்க தொடங்கியிருப்பது மிகப்பெரிய வெற்றியாகும். இதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஊடகங்களும் தற்போது விழித்துக்கொண்டுள்ளன. இது வெற்றி இல்லையா?" எனக் கூறியிருந்தார். மற்றொரு ட்விட் பதிவில், "பாஜக ஒருபோதும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியது இல்லை. நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். 10 லட்சம் வேலைவாய்ப்புகள் எப்போது வழங்கப்படும் என்ற கேள்விகள் அதிகமாக கேட்கப்படுகிறது. அதேவேளையில், பிரதமர் மோடி அளித்த 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி என்னவானது என்று பாஜகவிடம் கேளுங்கள்"என்று கூறியிருந்தார்.