ரிசல்டுக்கு பிறகுதான் இருக்கு கச்சேரி.. பீகார் முதல்வர் பதவியை கேட்கும் பாஜக? வருகிறது 'வாய்ஸ்'
பாட்னா: பீகாரில் தற்போது உள்ள டிரென்ட்படி பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை உள்ளது.
அதேநேரம் பாஜக 74 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதாதளம் 48 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. அந்த பக்கம், 62 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதாதளமும், காங்கிரஸ் 20 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அதாவது, கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை விடவும் கணிசமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது பாஜக.
நிலைமை இதே மாதிரி நீடித்தால் பெரும்பான்மைக்கு தேவைப்படும் 122 தொகுதிகளை இந்த கூட்டணிதான் பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அப்படி நிலைமை வந்தால் யார் முதல்வராவார் என்ற அச்சம் ஐக்கிய ஜனதாதளம் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா கதி
மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதிலும் சிவசேனா முதல்வர் பதவியை கேட்டதற்கு பாஜக விட்டுக்கொடுக்கவில்லை. எனவே தான் அங்கு கூட்டணி உடைந்து தற்போது சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது.

தனிப்பெரும்பான்மை
அதே போன்ற நிலை பீகாரில் ஏற்படுமோ என்ற கேள்விகள் எழுகின்றன. தேர்தலுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ஒருவேளை பாஜக தனித்து அதிக இடங்களை பிடித்தாலும் நிதிஷ்குமார்தான் பீகாரின் முதல்வர் என்று அறிவித்து இருந்தார். ஆனால் ஒருவேளை, பாஜக தனித்து 122 தொகுதிகளுக்கு மேல் வந்துவிட்டால், அந்த நிலைப்பாடு அப்படியே தொடருமா அல்லது முதல்வர் பதவியில் பங்கு கேட்பார்களா என்ற கேள்விகள் எழுகின்றன.

எழுந்த வாய்ஸ்
இந்த நிலையில்தான் பாஜகவில் குரல்கள் மாற்றி ஒலிக்க ஆரம்பித்துள்ளன. கைலஷ் விஜய்வர்கியா என்ற பாஜக சீனியர் தலைவர் கூறுகையில், கொரானா காலத்திலும், பிரதமர் நரேந்திர மோடியின் இமேஜ் அதிகரித்துள்ளது என்பதை பீகார் தேர்தலில் பாஜக பெற்றுவரும் வாக்குகள் காட்டுகின்றன. எனவே, பீகாரில் யார் தலைமையில் ஆட்சி அமைப்பது என்பது பற்றி இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இவரது பேச்சை வைத்து பார்க்கும்போது பீகாரில் நிதிஷ்குமாருக்கு மாற்றாக பாஜகவிலிருந்து ஒருவர் முதல்வராக முன்னிறுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அச்சத்தில் ஜேடியூ
அதேநேரம் கடைசி நேரத்தில் ஆளும் கூட்டணியிலிருந்து வெளியே சென்ற சிராக் பாஸ்வான், நிதிஷ்குமார் கட்சிக்கு வரவேண்டிய ஓட்டுகளை சிதைத்துவிட்டார் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் புலம்புகிறார்கள். பாஜக, சிராக் பாஸ்வானை வெளியேறி இருக்க விட்டிருக்க கூடாது என்பது கேசி தியாகி போன்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர்களின் கருத்தாக இருக்கிறது. இரு கட்சி தலைவர்கள் இப்படி மாறி மாறி பேசுவதை பார்த்தால் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு யார் முதல்வர் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.












Click it and Unblock the Notifications