டீ பிரேக் போன செக்யூரிட்டி.. வங்கிக்குள் சுத்தியுடன் நுழைந்த திருடன்! துவைத்து எடுத்த காவல்துறை
பாட்னா: பீகார் மாநிலத்தில் வங்கியை கொள்ளையடிக்க வெறும் சுத்தியலோடு வந்த திருடனை காவல்துறையினர் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் கதிஹார் மாவட்டத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஒன்று அமைந்திருக்கிறது. இது மாவட்டத்தின் தலைமை வங்கியாகும்.
இந்த வங்கியில் நாள்தோறும் லட்சக்கணக்கில் பணம் பரிவர்த்தனை செய்யப்படுவதுண்டு. இவ்வாறு இருக்கையில், செவ்வாய்க்கிழமையான நேற்று காலை வழக்கம்போல வங்கியின் அலுவலர்கள் வங்கியை திறந்திருக்கின்றனர்.

கொள்ளை முயற்சி
பின்னர் காலை சுமார் 11 மணியளவில் வங்கிக்கு மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து வந்திருக்கிறார். இது வங்கி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நேரம். அதேபோல வங்கியின் பாதுகாவலர் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் வங்கிக்கு வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியை எடுத்து அங்கிருந்த எல்லாவற்றையும் உடைக்க தொடங்கியுள்ளார். கண்ணாடிகள் நொருங்கும் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அலற, கேஷ் கவுன்டரை நோக்கி வந்து பணத்தை எல்லாம் ஒரு பையில் போட்டு கொடுக்குமாறு அங்கிருந்த ஊழியரை
மர்ம நபர் மிரட்டியுள்ளார். பின்னர் சிலரை சுத்தியல் கொண்டு தாக்கவும் முயன்றுள்ளார். இதனையடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது
இந்நிலையில் வங்கியில் இருந்த சிலர் அந்த மர்ம நபரை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர். தன்னை பிடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை அறிந்த அந்த நபர் அங்கிருந்து வெளியேற எத்தனித்துள்ளார். ஆனால் அதற்குள் அங்கு வந்த ரோஷனா ஓபி பகுதி காவல்துறையினர் அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றுள்ளனர். வெளிப்புற கதவு பூட்டப்பட்டுள்ளது. உள்ளே சில வாடிக்கையாளர்கள் இருந்துள்ளனர். அதேபோல நான்கு போலீசார் அந்நபரை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் துப்பாக்கியை காட்டி சரணடையுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அந்நபர் சரணடைய மறுத்துவிட்டார். பின்னர் அந்நபரின் கவனத்தை திசை திருப்பி, பின்னால் இருந்த காவலர் ஒருவர் தனது துப்பாக்கியை கொண்டு அந்நபரின் முதுகில் பலமாக ஓங்கி அடிக்க அவர் அங்கேயே சுருண்டு விழுந்துவிட்டார். பின்னர் மீதமிருந்த காவலர்கள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

விசாரணை
இது குறித்து ரோஷனா ஓபி பகுதி காவல்துறையினர் கூறியதாவது, "இவரது பெயர் முகமது சதாம். இவர் நேற்று காலை வங்கியில் நுழைந்து கேஷ் கவுன்டர் கண்ணாடியை உடைத்து அங்கிருந்த ஊழியரை மிரட்டி பணம் கேட்டுள்ளார். அப்போது சிலர் இவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றுள்ளனர். வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் இவர் வங்கியை கொள்ளையடித்ததற்கான காரணம் குறித்து எதுவும் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் இவர் மட்டும்தான் ஈடுபட்டுள்ளாரா? அல்லது இவருக்கு கூட்டாளிகள் யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

வீடியோ
ஒருவேளை கூட்டாளிகள் இருப்பின் அவர்களையும் விரைவில் கைது செய்வோம். ஆனால் தற்போதுவரை அதற்கான சாத்தியங்கள் தெரியவில்லை. இருப்பினும் நகரில் உள்ள மற்ற வங்கிகளுக்கு அலார்ட் கொடுத்துள்ளோம்" என்று கூறியுள்ளார். பட்டப்பகலில் வங்கிக்குள் நுழைந்து சுத்தியல் கொண்டு கொள்ளை முயற்சியில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications