பாஸ்வான் கட்சியை கூட்டணியைவிட்டு பொட்டிய கட்டிகிட்டு போகச் சொல்லிடுங்க... பாஜகவை மிரட்டும் ஜேடியூ
பாட்னா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியை வெளியேற்ற வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போர்க்கொடி தூக்கியுள்ளது.
பீகார் சட்டசபைக்கான தேர்தல் அக்டோபர் 28-ந் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. 3 கட்ட வாக்குகளும் நவம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகாரில் ஆர்ஜேடி- காங்கிரஸ் மெகா கூட்டணி தொகுதிப் பங்கீட்டை அறிவித்துள்ளது. ஆர்ஜேடி கட்சி 144 இடங்களிலும் காங்கிரஸ் 70 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இடதுசாரிகள் 29 இடங்களில் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் இருந்த HAM (S), RLSP ஆகியவை வெளியேறிவிட்டன.
பிரியங்கா காந்தியின் குர்தாவை தொட யார் தைரியம் தந்தது..? உ.பி. போலீஸை விளாசும் பாஜக பெண் தலைவர்..!
பஞ்சாயத்து செய்யும் பாஸ்வான் கட்சி
ஜேடியூ- பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் மத்திய அரசிலும் இடம்பெற்றுள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, ஜேடியூவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டது. பாஜகவுடன் மட்டுமே கூட்டணி; நிதிஷ்குமாரின் ஜேடியூ போட்டியிடும் இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என அறிவித்திருக்கிறது.
ஜேடியூ கடும் எதிர்ப்பு
இது பீகார் பாஜக- ஜேடியூ கூட்டணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. ஜேடியூவும் பாஜகவும் தலா 119 தொகுதிகளிலும் முன்னாள் முதல்வர் மாஞ்சியின் கட்சிக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் பாஜகவுடன்தான் கூட்டணி என லோக்ஜனசக்தி அடம்பிடித்துக் கொண்டிருப்பதை ஜேடியூ விரும்பவில்லை. உடனடியாக அந்த கட்சியை மத்திய அரசில் இருந்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் வெளியேற்ற வேண்டும் என்கிறது ஜேடியூ.
பாஸ்வானை தூக்கி அடிங்க
இது தொடர்பாக ஜேடியூ மூத்த தலைவர் அஸ்லம் ஆசாத் கூறுகையில், பாஜக ஒரே நேரத்தில் 2 படகுகளில் பயணிக்க முடியாது. அது பேரழிவைத்தான் தரும். ஆகையால் ராம்விலாஸ் பாஸ்வானை மத்திய அமைச்சரவையில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்; கூட்டணியில் இருந்தும் லோக் ஜனசக்தி கட்சியை தூக்கி எறிய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். பாஜகவின் இரட்டை குதிரை சவாரி என்பது தற்கொலை முயற்சியாகவே இருக்கும் என்றார். இது தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் நிதிஷ்குமார் விவாதிக்க உள்ளார்.
ஜேடியூ வெற்றிக்கு சிக்கல்
ஜேடியூவின் செயல் தலைவரான அசோக் சவுத்ரி, லோக்சபா தேர்தலில் பாஸ்வான் கட்சி வெற்றி பெறுவதற்கு நிதிஷ்குமார் தேவைப்பட்டார். இப்போது திடீரென சித்தாந்த பிரச்சனை வந்துவிட்டதா? என கேள்வி எழுப்பியிருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் ஜேடியூவை எதிர்த்து லோக்ஜனசக்தி போட்டியிட்டால் 20 முதல் 25 தொகுதிகளில் அந்த கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஜேடியூவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர பாஜகவும் பாஸ்வான் கட்சிக்கு மறைமுகமாக உதவி வருகிறதோ என்கிற சந்தேகம் பீகார் அரசியலில் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.