அங்கே 8.. இங்கே வெறும் 2.. குழப்பும் நிதிஷ்குமார்! பரபரக்கும் லாலு பிரசாத் யாதவ்! இது பீகார் அரசியல்
பாட்னா: பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், லாலு யாதர் தரப்பும் ஆக்ஷனில் இறங்கியுள்ளது. இப்போது அங்கே கள சூழல் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பீகாரில் ஜேடியு மற்றும் ஆர்ஜேடி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட லாலு யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவை மறைமுகமாகச் சாடும் வகையில் வாரிசு அரசியலைக் கடுமையாக விமர்சித்து பீகார் முதல்வரும் ஜேடியு தலைவருமான முதல்வர் நிதிஷ் குமார் பேசியிருந்தார்.

பீகார்: இதற்கிடையே நிதிஷ் குமார் காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணியை உடைத்துக் கொண்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகவே அவர் தனது எம்எல்ஏக்களை பீகார் தலைநகர் பாட்னாவுக்கு அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி கூட்டணியை முறித்துக் கொண்டு போனால் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து லாலு பிரசாத் யாதவ் தரப்பு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த 8 தான் முக்கியம்: பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே மெஜாரிட்டிக்கு குறைந்தபட்சம் 122 இடங்கள் தேவை. எனவே, மெஜாரிட்டி எண்ணிக்கையை நோக்கி ஆர்ஜேடி தரப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நிதிஷ் குமார் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறினால், மெஜாரிட்டி பெற இன்னும் 8 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும். கூட்டணியை முறித்துக் கொண்டால் மாநிலச் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உருவெடுக்கும்.
அதேநேரம் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி கட்சிக்கும் 122 என்ற மெஜிக் எண்ணிக்கையை எட்ட, இன்னும் இரண்டு எம்எல்ஏக்கள் தேவை. எனவே, இப்போது லாலு யாதவ் தரப்பினர் தங்களுக்கான 2 எம்எல்ஏக்களை திரட்டும் பணிகளிலும், எதிர்த் தரப்பிற்கு 8 எம்எல்ஏக்கள் செல்லாமல் தடுக்கும் நடவடிக்கையிலும் தான் இறங்கியுள்ளனர்.
கடந்த கால நிகழ்வு: நிதிஷ் குமார் கடந்த 2022ஆம் ஆண்டில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். பிறகு ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் உதவியுடன் ஆட்சியை அமைத்த அவர் பீகார் முதல்வராகவே தொடர்ந்தார். இதற்கிடையே மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள நிதிஷ்குமார் திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பீகார் பாஜக தலைவர் சௌத்ரி மற்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி சௌபே ஆகியோர் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதுவும் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போவதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜேடியு தலைவர்கள் லாலன் சிங், விஜய் குமார் சவுத்ரி மற்றும் பலர் தற்போதைய பீகார் கள நிலவரம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் ஆலோசனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
லாஸ்ட் ஆப்ஷன்: ஒரு வேளை லாலு பிரசாத் பெரும்பான்மைக்குத் தேவையான அந்த மேஜிக் நம்பரைப் பெறும் சூழல் ஏற்பட்டால் பீகார் சட்டசபையைக் கலைப்பது குறித்தும் நிதிஷ் குமார் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான "இந்தியா" கூட்டணிக்குத் தேவையான முதல் முன்னெடுப்பை எடுத்தவரே நிதிஷ்குமார் தான். அவர் பாஜகவுடன் மீண்டும் கை கோர்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு மிகப் பெரிய அடியாகவே இருக்கும். லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் சூழலில் நிதிஷ்குமாரின் இந்த செயல் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications