நின்றதே பிரிக்கத்தானே.. 5.70% வாக்குகள் பெற்றும்.. ஒரே ஒரு தொகுதியில் வென்ற சிராக் பாஸ்வான் கட்சி!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் 5.70% வாக்குகள் பெற்ற சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. வேறு எந்த ஒரு தொகுதியிலும் அந்த கட்சி முன்னிலை வகிக்கவில்லை.
பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி மிகவும் வலிமையான கட்சியாக இல்லைதான் என்ற போதும் தீர்மானிக்கும் சக்தியாகத்தான் இருந்து வருகிறது. ராம்விலாஸ் பாஸ்வான் காலத்தில் இருந்து தக்க வைத்துக் கொள்ளப்பட்டு வரும் தலித் வாக்கு வங்கி எப்படியான ஆட்டத்துக்கும் பயன்படும் என்பதற்கு இந்த தேர்தல் நல்ல உதாரணம்.
பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அதே பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூவை ஒழித்துக் கட்ட உதவிக்கரம் நீட்டியவர் சிராக் பாஸ்வான். ஜேடியூவுக்கு எதிராக மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியது லோக் ஜனசக்தி.
119 தொகுதிகளில் ஆர்ஜேடி கூட்டணி வெற்றி பட்டியல் ரிலீஸ்- தேர்தல் கமிஷன் மீது சரமாரி புகார்!
இதனால் ஜேடியூ கட்சியின் வெற்றி பல தொகுதிகளில் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இன்னொரு பக்கம் இந்த தேர்தலில் மொத்தம் 5.70% வாக்குகளை எல்ஜேபி பெற்று ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆம் சிராக் பாஸ்வானின் இலக்கு பீகாரில் வெல்வது அல்ல- பீகாரில் ஜேடியூவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான்; பாஜகவுக்காக இந்த அஜெண்டாவை வெற்றி கரமாக செயல்படுத்திவிட்டார் சிராக் பாஸ்வான்.