உறவாடி குடியை கெடுத்தார்கள்; பழிக்குப் பழி; ஒரு குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய மாவோயிஸ்ட்கள்!
பாட்னா: பீகார் மாநிலம் கயாவில் உறவாடி குடியை கெடுத்ததாக கூறி ஒரு குடும்பத்தையே மொத்தமாக மாவோயிஸ்ட்கள் தீர்த்துக்கட்டிய நிகழ்வு நடந்துள்ளது.
துமாரியாவில் உள்ள மோன்பார் கிராமத்தில் நடந்துள்ள இந்த நிகழ்வை கங்காரு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கியதாக மாவோயிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் ஜஸ்ட் 4 மணி நேர விசிட்..! ரூ.23 கோடி செலவிடும் மாநில அரசு!
கங்காரு நீதிமன்றம் என்பதை சட்ட அங்கீகாரம் இல்லாத முறையில் நடத்தப்படும் விசாரணை அல்லது கட்டப்பஞ்சாயத்து என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
பீகார் மாநிலம்
பீகார் மாநிலம் கயாவில் உள்ள துமாரியா அருகே மோன்பார் என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள சர்ஜு போக்தாவின் வீட்டை வெடிவைத்து தகர்த்த மாவோயிஸ்ட்கள், சர்ஜு போக்தாவின் மகன்களான சத்யேந்திர சிங் போக்தா, மகேந்திர சிங் போக்தா மற்றும் அவர்கள் இருவரது மனைவிகள் என 4 பேரை வீட்டு முற்றத்தில் வைத்து தூக்கிலிட்டுள்ளனர் மாவோயிஸ்ட்கள். மேலும், தங்களுக்கு துரோகம் செய்பவர்கள் இதுபோன்ற கடும் தண்டனையிலிருந்து தப்பமுடியாது எனவும் எச்சரித்து அங்கு போஸ்டர் ஒட்டிச் சென்றுள்ளனர் மாவோயிஸ்ட்கள்.
4 பேர் கொலை
ஒரு குடும்பத்தையே அதுவும் இரண்டு பெண்களை ஈவு இரக்கமின்றி மாவோயிஸ்ட்கள் கொலை செய்ய வேண்டிய காரணம் என்ன என ஆராய்ந்த போது, அம்ரேஷ் குமார், சீதாகுமார், சிப் பூஜன் குமார், உதய்குமார் ஆகிய 4 மாவோயிஸ்ட்கள் கடந்தாண்டு சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்லப்பட்ட நிகழ்வில் போக்தா குடும்பத்தினருக்கு தொடர்புடையாக மாவோயிஸ்ட்கள் கருதியதே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
பழிக்குப் பழி
மேற்கண்ட 4 மாவோயிஸ்ட்களையும் தாங்கள் தான் என்கவுண்டர் செய்ததாக போலீஸ் கூறி வரும் நிலையில், அதனை திடமாக மறுக்கும் உயிரிழந்த மாவோயிஸ்ட்களின் சக தோழர்கள் போக்தா குடும்பத்தின் கைங்கர்யத்தால் தான் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக நம்பினர். இதன் காரணமாக ஓராண்டு கழித்து பழிக்குப் பழியாக மோன்பார் கிராமத்திற்குள் புகுந்து போக்தா குடும்பத்தை மாவோயிஸ்ட்கள் மொத்தமாக வேட்டையாடியுள்ளனர்.
கங்காரு நீதிமன்றம்
இந்த நிகழ்வு பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாவோயிஸ்ட்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் தொடங்கியுள்ளன. தாக்குதல்கள் ஆங்காங்கு தொடர்ந்தாலும் கூட கங்காரு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தி மாவோயிஸ்ட்கள் தண்டனை வழங்கியது பீகாரில் இதுவே முதல்முறையாகும்.