பாஜகவை மைனாரிட்டி ஆக்கியாச்சி.. இனி ராகுலால் மக்களுக்கு நீதி கிடைக்கும்.. பீகாரில் ஸ்டாலின் பேச்சு
பாட்னா: ‛‛மக்களிடம் இருந்து வாக்குரிமையை பறிக்கும் பாஜகவின் அதிகாரத்தை மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் ‛இந்தியா' கூட்டணிக்கான அடித்தளத்தை இங்குள்ள பாட்னாவில் தான் விதைத்தோம். 400 இடங்கள் என்று கனவு கண்டவர்களை 240 இடங்களில் அடக்கியது இந்தியா கூட்டணி. மெஜாரிட்டி என்று ஆட்டம் போட்டவர்கள் மைனாரிட்டி ஆக்கிவிட்டார்கள். மக்கள் சக்தி முன்பு எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டு தான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் பீகார் நிரூபிக்க வேண்டும். ராகுல் காந்தி இன்று இந்தியாவுக்கான வழக்கறிஞராக இருக்கிறார். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்'' என பீகார் யாத்திரையில் ஸ்டாலின் பேசினார்.
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இப்போது ராகுல் காந்தி 'வாக்காளர் அதிகாரம்' என்கிற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். பீகார் முழுக்க பயணிக்கும் அவர் மக்களை களத்தில் சென்று சந்தித்து தேர்தல் ஆணையம் மீதான தனது குற்றச்சாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
பீகார் மாநிலம் தர்பங்காவில் இன்று நடந்த யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். ராகுல் காந்தியுடன், கனிமொழி எம்பி, பிரியங்கா காந்தி எம்பி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். அதன்பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
பீகார் தேர்தலில் பாஜக தோற்கப்போகிறது. பீகார் தேர்தலில் ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவ் வெற்றியை தேடி தருவார்கள். அதனால் தான் இந்த வெற்றியை தடுக்க பார்க்கிறார்கள். நியாயமாக வாக்குப்பதிவு நடந்தால் பாஜக கூட்டணி தோற்றுவிடும் என்று மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள். 65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. சொந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதை விட பயங்கரவாதம் இருக்க முடியுமா?. அனைத்து அடையாள அட்டை இருந்தாலும் அவர்களுக்கு முகவரி இல்லாமல் ஆக்கி உள்ளனர்.
சகோதரர்கள் ராகுலும், தேஜஸ்வி ஆகியோர் பீகாரில் பெறப்போகும் வெற்றியை தடுக்க முடியாத பாஜக கொல்லைப்புறம் வழியாக வேலையை பார்க்கிறது. இதற்கு எதிராக சகோதரர்கள் எடுத்துள்ள போராட்டத்தை வாழ்த்துவதற்காக தான் இங்கு வந்துள்ளேன். ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை அம்பலப்படுத்தி வருகிறார். இதற்கு தேர்தல் ஆணையத்தால் முறையான பதில் கூட சொல்ல முடியவில்லை. ஆனால் ராகுல் காந்தி உறுதி மொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ் குமார் சொல்கிறார்.
இந்த மிரட்டலுக்கு எல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா?. ராகுல் காந்தியின் வார்த்தைகளிலும், கண்களிலும் பயம் இருக்காது. ராகுல் காந்தியை பொறுத்தவரை அரசியலுக்காகவும், மேடைக்காகவும் பேசும் நபர் இல்லை. அவர் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனத்துடன் இருப்பவர். இப்போது ஏன் பாஜக பாய்கிறார்கள் என்றால்.. தேர்தல் எப்படி நடக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். இதனால் தான் பாஜக அவர் மீது பாய்கிறது.
மக்களிடம் இருந்து வாக்குரிமையை பறிக்கும் பாஜகவின் அதிகாரத்தை மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள். அதை தான் பீகாரில் இன்று கூடியிருக்கும் கூட்டம் எடுத்து காட்டுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான அடித்தளத்தை இங்குள்ள பாட்னாவில் தான் விதைத்தோம். எதிர்க்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள் என்று நினைத்த பாஜகவின் கர்வத்தை தகர்த்த இடம் தான் பீகார். 400 இடங்கள் என்று கனவு கண்டவர்களை 240 இடங்களில் அடக்கியது இந்தியா கூட்டணி. மெஜாரிட்டி என்று ஆட்டம் போட்டவர்கள் மைனாரிட்டி ஆகிவிட்டார்கள். மக்கள் சக்தி முன்பு எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டு தான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் பீகார் நிரூபிக்க வேண்டும்.
அருமை சகோதரர் ராகுல் காந்தி இன்று இந்தியாவுக்கான வழக்கறிஞராக இருக்கிறார். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும். இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும். மக்கள் சக்திக்கு இணையானது எதுவும் இல்லை என்று சகோதரர் தேஜஸ்வி காண்பித்து கொண்டிருக்கிறார். நீங்கள் 2 பேரும் பீகாரில் பெறப்போகும் வெற்றி தான் அடுத்தடுத்து ‛இந்தியா' கூட்டணிக்கு கிடைக்கும் வெற்றிக்கு அடித்தளமாக அமையப்போகிறது. பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நடக்கும் வெற்றி விழாவில் நான் உறுதியாக, நிச்சயமாக பங்கேற்பேன்.. நன்றி வணக்கம் என முதல்வர் ஸ்டாலின் தனது உரையை முடித்தார்'' என்றார்.












Click it and Unblock the Notifications