பாஜகவுடன் விரியும் விரிசல்.. உடைகிறதா கூட்டணி? எம்பி, எம்எல்ஏ கூட்டத்தை கூட்டும் பீகார் முதல்வர்
பாட்னா: பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கும் நிலையில் கட்சி எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு நிதீஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசின் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.
மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்குகளை கடைபிடித்து வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பல மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்களும் இதில் கலந்துகொண்டனர். அதே நேரம் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார்.
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி.. தாக்குதல் நடத்திய நபரை தேடும் போலீஸ்!
கொரோனா பாதிப்பு
அதேபோல் பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதீஷ் குமார் இதில் பங்கேற்கவில்லை. அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிதீஷ் குமார் உடல்நலன் காரணமாகவே இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், அவர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவுடன் மாநிலத்தில் நடைபெறும் இதர அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவே செய்கிறார்.
நிதி ஆயோகி மீது அதிருப்தி
மாநிலங்களின் வளர்ச்சி தர பட்டியலில் பீகாரை நிதி ஆயோக் நீண்ட காலமாக கடைசி இடத்தில் வைத்து இருப்பதால் நிதீஷ் குமார் அந்த அமைப்பின் மீது அதிருப்தி அடைந்துள்ளார் என்று பீகார் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அளித்த பிரிவு உபசார விழாவின்போது அளித்த விருந்தையும் நிதீஷ் குமார் புறக்கணித்தார்.
மோடி, அமித்ஷா கூட்டங்கள் புறக்கணிப்பு
ராம்நாத் கோவிந்த் பீகாரை சேர்ந்தவராக இருப்பதால் இதில் நிதீஷ் நிச்சயம் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது பாஜகவினரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அதேபோல் அமித்ஷா நடத்திய முதலமைச்சர்கள் கூட்டத்திலும் நிதீஷ் குமார் பங்கேற்காமல் அமைச்சரையே அனுப்பி வைத்தார். ஒரே மாதத்தில் பிரதமரின் 2 நிகழ்ச்சிகளை கூட்டணி கட்சியை சேர்ந்த முதலமைச்சரே புறக்கணித்து இருப்பது அக்கட்சியினரை குழப்பமடைய செய்தது.
கூட்டணியில் விரிசலா?
அக்னிபாத் விவகாரம், சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் நிதீஷ் குமாரின் நிலைபாடு மத்திய பாஜக அரசுக்கு எதிராக இருந்ததால் மாநில ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியிலும் உரசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே நிதீஷ் குமார் இத்தகைய கூட்டங்களை புறக்கணிப்பதாக பாட்னா அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு நிதீஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இப்படியும் இருக்கலாம்
நிதீஷ் குமாரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஆர்.சி.பி. சிங் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அவரது குடும்பத்தினர் பெயரில் சேர்ந்திருக்கும் சொத்துக்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு கட்சியும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அவர், தனி கட்சி உருவாக்குவது குறித்தும் பேசியுள்ளார். இது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.