பிரச்சனை ஓவர்! பாஜக ஆதரவில் நாளை மீண்டும் பீகார் முதல்வராக பதவியேற்கும் நிதிஷ் குமார்? என்ன நடந்தது?
பாட்னா: பீகாரில் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்து நாளை மீண்டும் பீகார் முதல்வராக 9வது முறையாக ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு நிதிஷ் குமாருடன் கூட்டணி வைக்க பீகார் பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்களை கட்சி மேலிடம் சமாதானம் செய்தது எப்படி? என்பது பற்றிய முக்கிய விஷயமும் கசிந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.

பாஜக 74 தொகுதிகளிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களிலும் வென்ற நிலையில் இருகட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. பாஜக அதிக இடங்களில் வென்றாலும் கூட முதல்வர் பொறுப்பு நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட்டது. அவர் முதல்வராக பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வென்று பின்தங்கியது.
ஆனால் கடந்த 2022ல் பாஜக, நிதிஷ் குமார் இடையே பிரச்சனை உருவானது. அதாவது நிதிஷ் குமாரை நீக்கவிட்டு பாஜகவை சேர்ந்தவரை முதல்வராக்க அந்த கட்சி திட்டமிட்டது. இதையடுத்து பாஜக கூட்டணிக்கு குட்பை சொன்ன நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து முதல்வரானார். இது பாஜகவை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது.
இதற்கிடையே தான் ‛இந்தியா' கூட்டணியில் தனக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கவில்லை. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பாளர் தரவில்லை என நிதிஷ் குமார் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ‛இந்தியா' கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக அவர் பீகாரில் காங்கிரஸ் மற்றும் லாலு கட்சியுடன் இருக்கும் ஆட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் கைகோர்க்க திட்டமிட்டு காய்நகர்த்தி வந்தார். தற்போது இதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. அதன்படி பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் நாளை மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் அவர் 9வது முறையாக முதல்வராக உள்ளார்.
முன்னதாக நிதிஷ் குமாருடன் கூட்டணி வைக்க பீகார் பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிதிஷ் குமார் சந்தர்ப்பவாத அரசியல்வாதி. கடந்த முறை நமது முதுகில் குத்திவிட்டு சென்றுவிட்டார். இதனால் மீண்டும் அவருடன் கூட்டணி வைக்க வேண்டாம் என போர்க்கொடி தூக்கினர். ஆனால் அவர்களை கட்சி மேலிடம் சமாதானம் செய்துள்ளது. அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அமைதி காக்கும்படி கட்சி மேலிடம் பீகார் பாஜக தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு அடுத்த ஆண்டும் மீண்டும் பீகாருக்கு சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இதனால் இந்த நேரத்தில் முதல்வர் பதவியை பெற வேண்டாம். மேலும் முதல்வர் பதவிக்காக கூட்டணி மாறும் நிதிஷ் குமாரின் பெயர் வரும் காலத்தில் மக்களிடம் ‛டேமேஜ்' ஆகலாம். இது பீகாரில் பாஜக வளர உதவியாக இருக்கும். அதோடு குறுகிய கால முதல்வர் பதவியை நாம் எதிர்பார்க்க வேண்டாம். இதனால் அமைதி காக்க வேண்டும் என மேலிடம் பீகார் பாஜக தலைவர்களுக்கு அட்வைஸ் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்கும்போது பாஜக சார்பில் துணை முதல்வரும் பொறுப்பேற்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications