ஒடிஷா ரயில் விபத்து: பீகார் மாநிலத்தை சேர்ந்த 43 பேர் பலி- 88 பேர் கதி இன்னமும் தெரியவில்லை!
பாட்னா: ஒடிஷாவின் பாலசோர் பகுதியில் நிகழ்ந்த ரயில்கள் விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 43 பேர் பலியாகினர். மேலும் 88 பேர் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ஒடிஷா பாலசோர் அருகே விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 288 பேர் பலியானதாக அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியோ, பலி எண்ணிக்கையை மறைக்கிறது மத்திய பாஜக அரசு; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பலரையும் காணவில்லை என குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் பீகார் மாநில அரசு தங்களது மாநிலத்தை சேர்ந்த 43 பேர், ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்துவிட்டனர்; 44 பேர் படுகாயமடைந்துள்ளனர்; மேலும் 88 பேர் நிலைமை என்ன என்பது தெரியவில்லை என கூறியுள்ளது. ஒடிஷா ரயில் விபத்தில் பலியான 100க்கும் மேற்பட்டோர் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என கூறப்படும் நிலையில் பீகார் அரசு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஒடிஷா ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என மத்திய அமைச்சர்கள் கூறி வந்தனர். இதனையடுத்து திடீரென சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்தது. தற்போது சிபிஐ நடத்தி வரும் விசாரணைகளில் பல்வேறு சந்தேகத்துக்குரிய கேள்விகளை முன்வைக்கப்படுவதால் விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications