ராகுல் மீது மமதாவுக்கு வருத்தம்-கெஜ்ரிவால் மீது உமருக்கு கடுப்பு- பாட்னா கூட்டத்தில் வெடித்த குமுறல்
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் சக கட்சிகள் மீதான மனக்குமுறல்களை பகிரங்கமாக கொட்டியதாகவும் இந்த குமுறல்களை சரத்பவார், உத்தவ் தாக்கரே சமாதானப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாட்னாவில் இன்று பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பீகார் முதல்வர் ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ்குமார், பீகார் துணை முதல்வர் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தமிழ்நாடு முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி,

டெல்லி- பஞ்சாப் முதல்வர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா (யூபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் தேசிய மாநாட்டு கட்சி உமர் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மக்கள் ஜனநாயக கட்சி மெகபூபா முப்தி, இடதுசாரிகளின் தலைவர்கள் சீதாராம் யெச்சூர், டி.ராஜா, தீபங் பட்டாச்சார்யா, ஜார்க்கண்ட் முதல்வர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் சக கட்சிகள் மீதான அதிருப்தியை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசுகையில், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தங்களுடன் இணைந்து செயல்படாமல் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளுடன் கை கோர்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும் என்றார். தேசிய மாநாட்டு கட்சியின் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு நீக்க விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நிலைப்பாட்டை விமர்சித்தார். அதேபோல ஆம் ஆத்மி தரப்பில், டெல்லி சேவைகள் மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்குமா? என கிடுக்குப்பிடி கேள்வி முன்வைக்கப்பட்டது.
இத்தகைய காரசார விவாதங்களுக்கு இடையே பேசிய சரத்பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் மகாராஷ்டிராவில் நாங்கள் இருவரும் 25 ஆண்டுகளாக கடுமையான எதிரிகளாக இருந்து சண்டை போட்டவர்கள்; இப்போது இணைந்து செயல்படவில்லையா? அதேபோலதான் நாம் அனைவரும் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சமாதானம் செய்ய கொஞ்சம் பதற்றம் தணிந்தது என்கின்றன பாட்னா தகவல்கள்.












Click it and Unblock the Notifications