பீகாரில் இளைஞர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை.. புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
பாட்னா: பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில இளைஞர்கள் பலனடையும் வகையில், புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின்படி பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவியும் திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, பீகாரில் ஜன நாயக் கர்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தை இன்று திறந்து வைக்கிறார். அத்துடன் பீகார் மாநில இளைஞர்களுக்கான ரூ.62,000 கோடி திட்டங்களும் தொடங்கப்படும். இவை இளைஞர் மேம்பாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்டவை. மாநிலத்தின் வளர்ச்சிக்கு இது முக்கியமானது என பாஜக கூறுகிறது. பீகார் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தாக்கூருக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் பின்தங்கிய சமூகத்தினர் வாக்குகளை என்டிஏ அரசு ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது..

"முதலமைச்சர் நிச்சய ஸ்வயம் சஹாயதா பட்டா யோஜனா" என்கிற இந்த திட்டம், 5 லட்சம் பட்டதாரிகளுக்கு பயனளிக்கும். திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கும். இலவச திறன் பயிற்சியும் இதில் சேர்க்கப்படும். முன்னதாக கடந்த செப்டம்பர் 26 அன்று ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டது. "முதலமைச்சர் மகிளா ரோஸ்கர் யோஜனா" என்கிற பெயரில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் சுயதொழில் செய்யும் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.7,500 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது முதல் தவணை நிதியுதவி ஆகும்.
கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்
இது தவிர பீகார் மாணவர் கடன் அட்டைத் திட்டமும் மேம்படுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. கல்வித் துறையை இது மேம்படுத்துகிறது. ரூ.4 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இதுவரை 3.92 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றனர். அவர்களுக்கு ரூ.7,880 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த திட்டம் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு இது ஒரு தூண்டுகோலாகும் என பாஜக பெருமிதத்துடன் கூறுகிறது.
இது குறித்து பாஜக தலைவர்கள் கூறுகையில், "பி.எம்-சேது திட்டத்தில் பல மேம்பாடுகள் உள்ளன. பாட்னா மற்றும் தர்பங்காவில் உள்ள ஐ.டி.ஐ-கள் மேம்படுத்தப்படும். உள்கட்டமைப்பு, டிஜிட்டல் கருவிகள், அடைக்காப்பக மையங்கள் உருவாக்கப்படும். "பி.எம்-உஷா" திட்டத்தால் நான்கு பல்கலைக்கழகங்கள் பயனடையும். பீகாரில் நவீன வசதிகள் உருவாக்கப்படும். இதனால் 27,000 மாணவர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள். கல்வித் தரம் இதனால் உயரும்" என தெரிவித்திருக்கிறார்கள்.
என்.ஐ.டி. பிஹ்தா வளாகத்தின் வசதிகள்
பாட்னாவில் உள்ள என்.ஐ.டி-யின் பிஹ்தா வளாகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த வளாகம் 6,500 மாணவர்களுக்கு இடமளிக்கும். இது உயர்கல்விக்கு ஒரு புதிய மையமாகும். இங்கு 5ஜி ஆய்வகம் போன்ற நவீன வசதிகள் உள்ளன. இஸ்ரோவின் பிராந்திய விண்வெளி கல்வி மையம் உள்ளது. ஒன்பது ஸ்டார்ட்அப்களுக்கான மையமும் இங்கு செயல்படும். இது புதுமைகளை ஊக்குவிக்கும்.
இந்த திட்டங்கள் பீகார் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் இது முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் நலன்கள் கிடைக்கும். மாநில வளர்ச்சிக்கு இவை பெரிதும் உதவும் என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications