மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல முயன்றதாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மோடியைக் கொல்ல திட்டமிட்ட இந்த கும்பல் அமெரிக்க உளவுத் துறையைத் தொடர்பு கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
இந்தியாவின் 15வது பிரதமராகக் கடந்த 2014ம் ஆண்டு முதல் இருப்பவர் நரேந்திர மோடி. நமது நாட்டின் பிரதமராக உள்ள மோடியின் உயிருக்குக் கடந்த காலங்களிலும் பல முறை அச்சுறுத்தல் வந்துள்ளது. அவை குறித்து உரிய விசாரணையை நடத்திப் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் உடனடி நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.

மோடி கொலை முயற்சி
பிரதமர் மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகச் சொல்லி மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு தான் பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய சதி தீட்டியதாகக் கூறி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிம்ரி அடுத்துள்ள ஆஷா பத்ரி கிராமத்தைச் சேர்ந்த அமன் திவாரி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.. தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், நடவடிக்கை எடுத்த போலீசார் திவாரியை கைது செய்தனர்.
சிஐஏ மெசேஜ்
அதாவது அமன் திவாரி சிஐஏக்கு அனுப்பிய அந்தச் செய்தியில், "பிரதமர் மோடியின் பாதுகாப்பைத் தகர்க்க என்னால் முடியும். அதற்குப் பதிலாக எனக்குப் பணம் தர வேண்டும்" எனப் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்க ஏஜென்சிகள், உடனடியாக இந்தியப் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தகவல் தெரிவித்தன. அதன் அடிப்படையில், திவாரியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய நிலையில், பிறகு அவரைக் கைது செய்தனர். அமன் திவாரி, பிரதமர் மோடியைக் கொல்லும் நோக்கில் ஒரு வெளிநாட்டு அமைப்பைத் தொடர்பு கொண்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
என்ன நடந்தது
மேலும், இதற்காக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ-க்கு ஒரு திட்ட முன்மொழிவையும் திவாரி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சதித்திட்டத்தை நிறைவேற்ற பெரும் தொகையைக் கோரியுள்ளார். 22 நாட்களில் வேலையை முடித்துவிடுவேன் என்றும் கூட அவர் சொல்லி இருக்கிறார். இது எல்லாம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
கைது
திவாரி வீட்டில் நடத்திய சோதனையின்போது, அமன் திவாரியின் வீட்டிலிருந்து லேப்டாப் மற்றும் பிற எலக்ட்ரானிக் உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தச் சாதனங்கள் குறித்த கூடுதல் ஆதாரங்களைச் சேகரிக்க தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. போலீசார் திவாரியிடம் தீவிர விசாரணையை நடத்திய நிலையில், அவர் இதில் தொடர்புடைய மேலும் இருவர் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கு யார் காரணம்.. பின்னணியில் இருப்பது யார்.. அமெரிக்க சிஐஏவிடம் அதை அனுப்பியது ஏன் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications