3 ஆண்டில் ரூ.241 கோடி வருமானம் ஈட்டிய பிரசாந்த் கிஷோர் - பீகார் துணை முதல்வரை கட்டம் கட்டி புகார்
பாட்னா: பீகார் மாநிலத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் அந்த மாநில அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இந்நிலையில் பீகார் களத்தில் பிரசாந்த் கிஷோரும் தன் வேலையை தொடங்கியுள்ளார். தன் வருமானப் பட்டியலை வெளியிட்ட அவர், பீகார் துணை முதலமைச்சருக்கு எதிராக ஊழல், கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களாகவே பீகார் அரசியல் களம் சூடுபிடித்து கொண்டிருக்கிறது. முக்கியமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி, தேர்தல் ஆணையத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

பீகார் தேர்தல் களம்
அடுத்த வருடம் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக பீகார் தேர்தல் களம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை பீகாரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.
அதன்படி சுமார் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணிகளுடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இதற்காக அவர் வியூக வகுப்பாளர் பணியை விடுத்து, ஜன்சுராஜ் என்கிற கட்சியை தொட்ங்கியுள்ளார். இந்நிலையில் அவர் பீகார் மாநில துணை முதலமைச்சர் அசோக் செளத்ரி மீது பகீர் ஊழல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
3 வருடங்களில் 241 கோடி வருமானம் ஈட்டிய பிகே
இதுதொடர்பாக பீகாரில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரசாந்த் கிஷோர் தன் வருமான பட்டியலை வெளியிட்டார்." தேர்தல் வியூக வகுப்பாளராக கடந்த 3 வருடங்களில் நான் ரூ.241 கோடி வருவாய் ஈட்டியுள்ளேன்." என்றவர் தனக்கு எந்த வழியில் வருமானம் வந்தது, எவ்வளவு வரி கட்டியுள்ளேன், எவ்வளவு நன்கொடை வழங்கியுள்ளேன் என்று கூறி மற்ற பீகார் தலைவர்களின் ஊழல் மற்றும் குற்றப்பின்னணி குறித்து வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரசாந்த் கிஷோர், "பீகார் துணை முதலமைச்சர் அசோக் செளத்ரி மீது 6 கொலை வழக்குகள் உள்ளன. அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி கைது செய்ய வேண்டும். இதில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காவிடின் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். மேலும் தன் மகள் பெயரில் ஒரு டிரஸ்ட் தொடங்கி ரூ.100 கோடி வரை பெற்றுள்ளனர். அதிகளவு நிலம் வாங்கிக் கொடுத்துள்ளனர். இது எப்படி சாத்தியம்.
துணை முதல்வர் மீது புகார்
ரூ.20,000 கோடி மதிப்பிலான ஒரு திட்டத்திற்கு அசோக் 5 சதவீதம் கமிஷன் வாங்கியுள்ளார். அவர் உடனடியாக பதவி விலகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் ரூ.500 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன்." என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் பீகார் அரசியலில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications