"புது ரூட்டை" பிடிக்கும் பிகே! கடைசி நிமிடத்தில் பீகார் முதல்வர் மீட்டிங் ரத்து.. ஓ இதுதான் காரணமா
பாட்னா: காங்கிரஸ் கட்சியில் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இணைவது தோல்வியில் முடிந்த நிலையில், அவரது அடுத்தகட்ட திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்துப் பல யூகங்கள் கிளம்பி உள்ளன.
காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக சில ஆண்டுகளாகத் தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில், அக்கட்சியின் தலைமையைப் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்து இருந்தார். அவர் 2024 தேர்தலுக்கான திட்டத்தை முன் வைத்து இருந்தார்.
இந்தியாவுக்குள் எல்லை தாண்டி ஊடுருவி மீன்பிடித்த 6 சிங்களர் கைது- சிறையில் அடைப்பு
அதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சியிலும் யாரும் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால், அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவது கிட்டதட்ட உறுதி என்றே கூறப்பட்டது.
மறுப்பு
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை தீவிர ஆலோசனை நடத்தியது. இதனிடையே காங்கிரஸ் கட்சியில் இணைய பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் அளிக்கப்பட்ட செயற்குழுவில் இணைந்து பணியாற்ற பிகேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இருப்பினும், அதை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் சுர்ஜேவாலா குறிப்பிட்டார். இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ட்வீட்
இதனிடையே நேற்றைய தினம், பல்வேறு யூகங்களைக் கிளப்பும் வகையில் பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்து இருந்தார். அதாவது நல்லாட்சிக்கான பாதையைப் புரிந்துகொள்ள உண்மையான எஜமானர்களான மக்களிடம் செல்வதாகவும், அதனைப் பீகாரில் இருந்து தொடங்குவதாகவும் அவர் ட்வீட் செய்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் இணையும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், பிகே இதுபோன்ற ட்வீட் செய்திருந்தது பல யூகங்களைக் கிளப்பியது. பிகே புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது.
முதல்வர் நிதிஷ்குமார்
பீகார் மாநிலத்தில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இப்போது பிகே பாட்னாவில் உள்ள நிலையில், அவர் நிதிஷ்குமாரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் பாட்னாவில் நிதிஷ்குமாரை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. முதல்வர் நிதிஷ்குமாரும் கூட இந்த சந்திப்பிற்குக் காத்திருந்ததாகக் கூறப்பட்டது.
என்ன காரணம்
இருப்பினும், இறுதி நேரத்தில் இந்த சந்திப்பை ரத்து செய்த பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் ஆய்வுப் பணிகளைச் செய்தார். கடந்த காலத்தில் தனிப்பட்ட முறையில் நிதிஷ்குமாரை பிகே சந்தித்து இருந்தார். இருப்பினும், அதை பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நிதிஷ்குமார் ஊடகங்களில் வெளியிட்டு இருந்தார். இதன் காரணமாக பிகே அதிருப்தியில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே நிதிஷ் குமாரை சந்திக்கவில்லை என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிடுகின்றனர்,,
கடந்த காலம்
தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பல்வேறு கட்சிகள் உடன் இணைந்து பணியாற்றி இருந்தாலும் கூட, அவர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியில் தான் சிறிது காலம் இருந்தார். கடந்த 2018இல் பாஜகவுக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சமயத்தில், ரஷ்டிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் தூது சென்றவர் பிகே தான். இருப்பினும், அப்போது நிதிஷ் குமார் முதல்வர் பொறுப்பில் நீடிப்பார் என்று பாஜக உறுதிமொழி அளித்ததால் நிதிஷ்குமார் அமைதியானார்.
மீண்டும் இணைவார்களா
அதன் பின்னர், நடந்த சில கசப்பான நிகழ்வுகளுக்குப் பின்னர் பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனாத தள கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதேநேரம் 2020 சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர், பாஜக ஐக்கிய ஜனதா தளத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தச் சூழலில் தான், சில மாதங்களுக்கு முன்பு நிதிஷ்குமாருடன் மீண்டும் இணைய விரும்புவதாக பிகே குறிப்பிட்டிருந்தார்.