பீகார்: பாஜகவுடன் மல்லுக்கட்ட தயாராகும் நிதிஷ்- ஜேடியூவுடன் இணைகிறது ராஷ்டிரிய லோக் சமதா கட்சி
பாட்னா: பீகாரில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியை சமாளிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார் முதல்வர் நிதிஷ்குமார். ஜேடியூவை பலப்படுத்தும் வகையில் ராஷ்டிரிய லோக் சமதா கட்சியை இணைக்கும் முயற்சியில் தீவிரமாகி உள்ளார் நிதிஷ்குமார்.
பீகாரில் பாஜகவுக்கு எதிராக ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ் என மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து நின்றன. ஆனால் இந்த கட்சிகளிடையே ஈகோ பிரச்சனை தலைதூக்கியது. இதனால் பாஜகவுடன் நிதிஷ்குமாரின் ஜேடியூ மீண்டும் கை கோர்த்தது.

ஜேடியூவுக்கு எதிரான சதி
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தன் இன்னொரு முகத்தை காட்டியது. ஜேடியூவுடன் கூட்டணி வைத்த பாஜக இன்னொரு பக்கம் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தியுடன் ரகசிய கூட்டணி அமைத்தது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தியோ, ஜேடியூவை மட்டும் எதிர்த்து தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டது.

அருணாச்சல் ஜேடியூ
இதனால் பீகார் தேர்தலில் ஜேடியூ பெரும் பின்னடைவை எதிர்கொண்டது. பீகாரில் பாஜக 2-வது பெரிய கட்சியாக விஸ்வரூபம் எடுத்தது. இருந்தபோதும் நிதிஷ்குமார் தலைமையில்தான் ஜேடியூ- பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய கூட்டணி கட்சி என்று கூட பார்க்காமல் அருணாசல பிரதேசத்தில் ஜேடியூவுக்கு இருந்த 7 எம்.எல்.ஏக்களில் 6 பேரை கபளீகரம் செய்தது பாஜக.

வலிமையாகும் ஜேடியூ
பாஜகவின் இந்த அடுத்தடுத்த செயல்பாடுகள் அனைத்தும் ஜேடியூ கட்சியையே அழிக்கும் ஒருநடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதனால் உஷாராகிக் கொண்ட நிதிஷ்குமார் ஜேடியூவை வலிமைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சியானது ஜேடியூவுடன் இணைய உள்ளது.இது தொடர்பாக நிதிஷ்குமாருடன் உபேந்திர குஷ்வாஹா பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்படி ஜேடியூவுடன் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி இணையும் நிலையில் உபேந்திர குஷ்வாஹாவுக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது. குஷ்வா ஜாதியினரிடத்தில் செல்வாக்கு பெற்ற கட்சி இணைவதால் ஜேடியூவுக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.

இணைப்புக்கு எதிர்ப்பு
நிதிஷ்குமாரின் இந்த வியூகங்களை தகர்ப்பதில் பாஜகவும் மறைமுகமாக களமிறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ராஷ்டிரிய லோக் சமதா கட்சியானது இரண்டாக பிளவுபடும் நிலையில் உள்ளது. ஜேடியூவுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியின் 41 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications