உடலை தகனம் செய்யணும் ... பணம் கொடுங்க... விவசாயி உடலுடன் வங்கிக்கு படையெடுத்த கிராம மக்கள்!
பாட்னா: பிகார் மாநிலம் பாட்னாவில் இறுதி சடங்குக்கு பணம் இல்லததால் விவசாயி உடலுடன் அவர் கணக்கு வைத்திருந்த வங்கிக்கு சென்ற கிராம மக்கள் பணம் கொடுக்கும்படி கேட்டனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு கிராம மக்களுக்கு சிறிதளவு பணம் கொடுக்கப்பட்டது. அதன்பின்பு அவர்கள் மகேஷ் உடலுடன் அங்கிருந்து சென்றனர்.
நாங்கள் சந்தித்த வித்தியாசமான வழக்கு இது என்று உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
குடிசையில் வசித்தார்
பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் மகேஷ்(55). விவசாயி. திருமணமாகாத இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரனை இழந்தார். வேறொருவரின் நிலத்தில் கட்டப்பட்ட குடிசையில் வசித்து வந்தார். மகேஷ் பல மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
உடல் நலக்குறைவால் இறந்தார்
அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் அவருக்கு சமைத்த உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கி வந்தனர். இந்த நிலையில் மகேஷ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஆனால் பல மணி நேரத்திற்கு பின்பே அவர் இறந்தது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது.
கைகொடுத்த பாஸ்புக்
இதனை தொடர்ந்து உடலை தகனம் செய்ய அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டில் பணம் ஏதாவது உள்ளதா? என்று தேடினர். ஆனால் அங்கு பணமோ வேறு எந்த பொருளுமோ இல்லை. கடைசியில் அவர் வைத்திருந்த கனரா வங்கி பாஸ்புக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வங்கிக்கணக்கில் 1,17,298 ரூபாய் சேமிப்பில் இருந்தது தெரியவந்தது.
வங்கிக்கு படையெடுத்தனர்
இதனை தொடர்ந்து கிராம மக்கள், மகேஷ் உடலை தூக்கிகொண்டு அங்குள்ள கனரா வங்கி கிளைக்கு படையெடுத்தனர். ''மகேஷ் உடலை தகனம் செய்ய வேண்டும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.20,000 கொடுங்கள்'' என்று மக்கள் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் போலிஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
அதன்பேரில் போலீசார் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பணம் கொடுக்கும் வரை, அங்கு இருந்து செல்ல முடியாது என மக்கள் கூறினார். நீண்ட நேரத்திற்கு பிறகு அவர்களுக்கு சிறிதளவு பணம் கொடுக்கப்பட்டது. அதன்பின்பு மக்கள் மகேஷ் உடலுடன் அங்கிருந்து சென்றனர்.
வித்தியாசமான வழக்கு
இந்த அசாதாரண காட்சிகள் பீதியை உருவாக்கியதாக கனரா வங்கியின் கிளை மேலாளர் சஞ்சீவ் குமார் தெரிவித்தார். நாங்கள் சந்தித்த வித்தியாசமான வழக்கு இது என்று உள்ளூர் போலீஸ் அதிகாரி அம்ரேந்தர் குமார் கூறினார்.