காங். கூட்டணிக்கு ஷாக்.. ஹேப்பியில் பாஜக கூட்டணி.. பீகாரில் வெல்வது யார்? வெளியான கருத்து கணிப்பு
பாட்னா: பீகாரில் அடுத்த மாதம் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெல்லப்போவது யார்? என்பது குறித்து IANS - Matrize News சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியான நிலையில் பாஜக கூட்டணி ஹேப்பியாகி உள்ளது. மாறாக எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெரிய அதிர்ச்சி வைத்தியம் கிடைத்துள்ளது.
பீகாரில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்த கூட்டணியில் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்), முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகளும் உள்ளன.

மறுபுறம் எதிர்க்கட்சிகள் ‛மகாபந்தன்' என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடிஎனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் லிபரேஷன் - சிபிஐஎம்எல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பீகாரில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நவம்பர் 6ம் தேதியும், 2வது கட்டமாக நவம்பர் 11ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பீகாரை எடுத்து கொண்டால் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இதனால் பீகார் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் IANS - Matrize News Communications சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் பாஜக கூட்டணி மீண்டும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி பாஜக கூட்டணி குறைந்தபட்சம் 150 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 160 தொகுதிகள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பாஜக 80 முதல் 85 தொகுதிகள் வரை வெல்லும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 60 முதல் 65 தொகுதிகளில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதவிர பாஜக கூட்டணியில் உள்ள மஞ்சியின் எச்ஏஎம் கட்சி 3 முதல் 6 தொகுதிகளிலும்,சிராக் பஸ்வானின் கட்சி 4 முதல் 6 தொகுதிகளிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற சிறிய கட்சிகள் 1 முதல் 2 தொகுதிகளை கைப்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 37.3 சதவீத ஓட்டுகளை பெற்ற நிலையில் இந்த முறை 49 சதவீதம் வரையிலான ஓட்டுகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி 36 சதவீத ஓட்டுகளுடன் வெறும் 70-85 தொகுதிகளில் மட்டுமே கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி 60 முதல் 65 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 7 முதல் 10 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சி 6 முதல் 9 தொகுதிகளிம், இந்தயி கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 0-1 தொகுதிகளிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்தமுறை இந்த கூட்டணி 37.2 சதவீத ஓட்டுகள் பெற்ற நிலையில் இந்த முறை 36 சதவீத ஓட்டுகளாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்த விஐபி என்ற கட்சி இந்த முறை எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணி 2 முதல் 4 தொகுதிகள் வரை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சிகள் தவிர ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 1 முதல் 3 தொகுதிகள் வரை வெல்லலாம் எனவும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிசோரின் ஜன் சுராஜ் கட்சி 7 சதவீத ஓட்டுகளை பெற்று 2 முதல் 5 தொகுதிகள் வரை வெல்லலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 சதவீத ஓட்டுகள் வரை பெற்று 7 முதல் 10 தொகுதிகள் வரை வெல்லலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பால் பாஜக கூட்டணியினர் ஹேப்பியாகி உள்ளனர். காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி அதிர்ச்சியடைந்துள்ளது. ஏனென்றால் பாஜக கூட்டணியை தோற்கடித்து மீண்டும் அரியணை ஏற காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி திட்டமிட்டு பிரசாரம் செய்து வருகிறது. அவர்களுக்கு இந்த கருத்து கணிப்பு என்பது ஷாக்கை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications