பாஜக கூட்டணியில் பெரிய குழப்பம்! நிதிஷ் கட்சியில் இருந்து விலகிய டாப் தலைவர்.. என்ன நடந்தது! பரபர
பாட்னா: பாஜக உடனான என்டிஏ கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சியில் குழப்பம் வெடித்துள்ளது. அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான கே.சி. தியாகி நேற்றைய தினம் திடீரென ராஜினாமா செய்தார். அவர் எதிர்க்கட்சிகளில் இணையலாம் எனச் சொல்லப்படும் நிலையில், எதற்காக மூத்த தலைவராக இருந்த கே.சி. தியாகி ஜேடியு கட்சியில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
இப்போது மத்தியில் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது.

நீக்கம்: ஜேடியு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.சி. தியாகி நேற்று திடீரென ஜேடியு கட்சியில் இருந்து விலகினார். அவர் எதிர்க்கட்சிகளில் இணையலாம் எனக் கூறப்பட்டது. நிதிஷ் கட்சியில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி. தியாகி திடீரென விலகியது பேசுபொருளானது. இந்தச் சூழலில் இதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சில முக்கிய விவகாரங்களில் தலைமையின் அனுமதி இல்லாமல் கே.சி. தியாகி அறிக்கைகளில் வெளியிட்டுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே பாஜகவை விமர்சிப்பது என்பது நிதிஷுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன காரணம்: இது தொடர்பாக அக்கட்சியினர் கூறுகையில், "கே.சி.தியாகி கட்சியின் மிகவும் மரியாதைக்குரிய தலைவர். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், சமீப காலமாக அவர் முக்கிய விவகாரங்களில் தலைமையின் அனுமதி இல்லாமல் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினார். லேடரல் என்டரி, பொது சிவில் சட்டம் போன்ற முக்கியமான விஷங்களில் அவர் எதிர்க்கட்சி போல அறிக்கை விட்டார். தலைமையின் கருத்தைக் கேட்காமல் வெளியிடப்படும் இதுபோன்ற அறிக்கைகள் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும்" என்றார்.
சர்வதேச விவகாரம்: சமீபத்தில் கூட தியாகி இஸ்ரேல்- ஹமாஸ் போர் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்தே தியாகியை நிதிஷ்குமார் தரப்பு கண்டித்தாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ராஜினாமா நடந்துள்ளது. அக்கட்சியினர் கூறுகையில், "பொதுவாக வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் அரசின் பக்கம் தான் நிற்க வேண்டும். ஏனென்றால் அது தேசியப் பாதுகாப்பு தொடர்பானது. பல விஷயங்களைக் கருத்தில் கொண்டே வெளியுறவுத் துறை விவகாரங்களில் மத்திய அரசு ஒரு முடிவை எடுக்கிறது. நாம் அது குறித்து கருத்துச் சொல்லக் கூடாது.
அப்படி இருக்கும் போது இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அது தனிப்பட்ட சந்திப்பாக இருந்தால் ஓகே.. . ஆனால் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அறிக்கைகளை வெளியிட்டால் என்ன அர்த்தம்" என்றார்.
மறுப்பு: பாஜகவின் அழுத்தம் காரணமாகவே தியாகியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்யச் சொன்னதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், இதை அக்கட்சி வட்டாரங்கள் மறுத்துள்ளன. பாஜகவிடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லை என்றும், நிதிஷ் குமார் தானாக முன்வந்து இந்த முடிவை எடுத்தார் என்றும் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறினார்.
பொது சிவில் சட்டம், மல்யுத்த வீரர் வினேஷ் போகட் ஒலிம்பிக் விவகாரத்தில் கே.சி தியாகி மத்திய அரசை விமர்சித்து கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது தியாகி ஜேடியு கட்சியில் இருந்து விலகியுள்ள நிலையில், அவர் விரைவில் எதிர்க்கட்சிகள் ஒன்றில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications