பெரம்பலூர் காவலர் குடியிருப்பில் போலீஸ் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி.. தர்ம அடி வாங்கிய சக காவலர்
பெரம்பலூர்: பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் காவலரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த மற்றொரு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சியை சேர்ந்த 31 வயதாகும் பிரபாகரன், கடந்த 2017-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார. இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக வேலை செய்து வருகிறார். பிரபாகரன் பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் தங்கி, தினமும் வேலைக்கு சென்று வருகிறார்.

இந்த நிலையில் பிரபாகரன் கடந்த 12-ந்தேதி பணி முடிந்து இரவு மது போதையில் வீட்டிற்கு வந்தாராம். அப்போது ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள மற்றொரு முதல்நிலை காவலர் ஒருவரின் மனைவி, அவரது வீட்டின் முன் படிக்கட்டில் நின்றபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தாராம்
இதனைக்கண்ட பிரபாகரன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் வாயை பொத்தி மேல் தளத்திற்கு தூக்கி செல்ல முயன்றுள்ளார். இதில் சுதாரித்துக்கொண்ட அந்த பெண் பிரபாகரனை தள்ளிவிட்டு விட்டு தனது வீட்டிற்கு ஓடிச்சென்றுள்ளார். இதையடுத்து அவர் தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை கண்ணீர் மல்க கூறி கதறியிருக்கிறார். இதையடுத்து பிரபாகரனை ஆயுதப்படையில் குடியிருக்கும் சக போலீசார் தர்ம அடி கொடுத்துள்ளார்கள்.
இதனிடையே பாதிக்கப்பட்ட போலீஸ்காரரின் மனைவி பெரம்பலூர் காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பிரபாகரன் மீது 354, 354 (ஏ), 509, தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்துதல் தடை சட்டப்பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை பெரம்பலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டில் ஆஜர்படுத்தினார்கள். ஆயுதப்படை காவலர் பிரபாகரனை வருகிற 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ்காரர் பிரபாகரனை பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தார்கள். பிரபாகரனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். மது போதை ஒரே நாளில் அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி உள்ளது.












Click it and Unblock the Notifications