அம்பேத்கர் சிலை உடைப்பு.. பெரம்பலூரில் ஆக்ரோஷமான மக்கள் சாலை மறியல்.. பதற்றம் - போலீஸ் குவிப்பு
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வெங்கலம் என்ற ஊரில் பாதுகாப்பு கூண்டுக்குள் இருந்த அம்பேத்கர் சிலையின் கைகளை சிலர் இரவோடு இரவாக சேதப்படுத்தி சென்றதால் கொந்தளித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்தும் கூட அவர்கள் கலைய மறுப்பதால் பதற்றம் நிலவி வரும் சூழலில் 200க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமேதை அம்பேத்கரை பெருமைப்படுத்தும் வகையில் நம் நாட்டின் பல இடங்களில் இடங்களில் அவரது உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி தந்த அம்பேத்கரை நினைவில் கொள்ளும் வகையில் இந்த சிலைகள் உள்ளன. தமிழகத்தில் பல இடங்களில் அம்பேத்கர் சிலைகள் உள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேம்பந்தட்டை அருகே வெங்கலம் என்ற ஊர் உள்ளது. இந்த வெங்கலம் ஊரில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே அம்பேத்கரின் முழு உருவ சிலை என்பது வைக்கப்பட்டுள்ளது. மர்மநபர்கள் சிலையை சேதப்படுத்தி விடாமல் தடுக்க சிலையை சுற்றி பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் அந்த அம்பேத்கர் சிலையின் கைவிரல்கள் சேதமடைந்து இருந்தது. இரவோடு இரவோக யாரோ மர்மநபர்கள் பாதுகாப்பு கூண்டை திறந்து அம்பேத்கர் சிலையின் கைவிரலை உடைத்து இருப்பது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த கிராம மக்கள் கடும் கோபமடைந்தனர்.
அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அரும்பாவூர் - பெரம்பலூர் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் நின்றன.
இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் உடனடியாக விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் அங்கு பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து குவிந்தனர். இதனால் பரபரப்பு அதிகரித்தது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க 200க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் வெங்கலம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications