சென்னையில் மின்சார பஸ்கள்.. விரைவில் தமிழ்நாடு முழுக்க எலக்ட்ரிக் பஸ்கள்.. அரசின் அடுத்த பிளான்
பெரம்பலூர்: தமிழகத்தில் விரைவில் மின்சார பேருந்துகள் ஓடப்போகிறது. ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன், 500 மின்சார பஸ்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டாக சென்னையில் 100 மின்சார பேருந்துகள் பரிச்சார்த்த முறையில் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
தமிழகத்தில் பெட்ரோல் , டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளை இயக்க அரசு அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறது. பிரதம மந்திரியின் மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்திற்கு 57, 613 கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பஸ்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அரசு மற்றும் தனியார் கூட்டாக இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்திற்கான 57,613 கோடி ரூபாய் மொத்த செலவில் 20,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலும் விரைவில் மின்சார பேருந்துகள் ஓடப்போகிறது. ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன், 500 மின்சார பஸ்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் 100 மின்சார பேருந்துகள் பரிச்சார்த்த முறையில் இயக்கப்பட உள்ளது.
பெரம்பலுார் அரசு போக்குவரத்து பணிமனையில், 'ஏசி' வசதியுடன் கூடிய பணியாளர்கள் ஓய்வு அறை கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு தமிழக அரசு 2,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தால் மாநில போக்குவரத்து கழகம் எந்த வகையிலும் நலிவடையாது.
தமிழகத்தில் தற்போது, 100 பழைய பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 1,400 பழைய பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மாநிலத்திற்கு புதிதாக 2,000 பஸ்களை வாங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே அடுத்த மூன்று மாதங்களில் அந்த பஸ்கள் எல்லாம் தமிழ்நாட்டில் ஓடப்போகின்றன.
ஜெர்மன் வங்கி நிதி உதவியோடு, 500 மின்சார பஸ்கள் வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக, 100 மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இவை, முதலில் சென்னையில் சோதனை முறையில் இயக்கப்படும். பின், படிப்படியாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் என்றார்.
போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு டி.ஏ., உயர்வு குறித்த கேள்விக்கு,இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார். மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர் பிரச்னை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி தெரிவித்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு நவீன தொழில்நுட்பத்தோடு, ஆன்லைனில் தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தனது பேட்டியின் போது குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications