திமுகவில் இணையவில்லை! திடீரென பின்வாங்கிய குன்னம் ராமச்சந்திரன்
பெரம்பலூர்: திமுகவில் இணையும் எண்ணத்தில் இருந்து பின்வாங்குகிறேன், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என முன்னாள் அதிமுக எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெரம்பலூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், திமுகவில் இணைவது என்று நேற்று நான் அறிவித்தேன்.

நான் பேட்டிக் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் சென்ற போது எனது குடும்பத்தினர் எதிர்த்தனர். இதனால் நான் இன்று ஒரு மாற்று முடிவை எடுக்கிறேன். அதாவது அரசியல் பொது வாழ்க்கையில் இருந்தே நான் விலகுகிறேன்.
இது என் குடும்பத்தாரின் எதிர்ப்பு, எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் ஆலோசனை உள்ளிட்டவையால் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னுடன் பயணித்த அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். எந்த அரசியல் கட்சியிலும் இணையும் எண்ணமில்லை என கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி முன்னாள் சட்டசபை உறுப்பினரும், அதிமுக ஓபிஎஸ் அணி தொண்டர் உரிமை மீட்பு குழுவின் அம்மா பேரவை மாநிலச் செயலாளராகவும் குன்னம் ஆர்.டி. ராமச்சந்திரன் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அவரது அரசியல் ஆசானான வைத்திலிங்கமும் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து திடீரென நேற்றைய தினம் திமுகவில் இணைந்தார். இதுகுறித்து குன்னம் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் எனது அரசியல் ஆசான் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து வரும் 26ஆம் தேதி நானும் திமுகவில் இணைய போகிறேன் என தெரிவித்திருந்தார்.
அதாவது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்து ஓபிஎஸ் எந்த முடிவும் எடுக்காததால் அவருடைய ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற அமைப்பை தொடங்கினார். இதில், ஓபிஎஸ் ஆதரவாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
சட்டசபை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த வைத்திலிங்கம், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதை தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற வைத்திலிங்கம், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஓ. பன்னீர்செல்வத்துடன் ஏற்பட்ட பிளவிற்கான காரணங்களை விளக்கினார். "தேர்தல் விரைவில் வரவுள்ளதால், சரியான முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டியிருந்தது. அதனால் விலகி வந்தேன். ஓபிஎஸ்-க்கு அறிவுரை கூறும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை; அண்ணன் நல்ல முடிவை எடுப்பார்" என்று அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications