அதிகாலையிலேயே கோர சம்பவம்.. சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது மோதிய கார்.. 4 பேர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருந்த பக்தர்களின் கூட்டத்துக்குள் புகுந்து கார் விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் பலத்த காயமடைந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 65க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து, சமயபுரம் கோவிலுக்கு பாத யாத்திரையாகச் சென்றுள்ளனர். அதேபோல, சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த பக்தர்களும் பாத யாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர். இவர்கள் இன்று காலை 5 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் நோக்கி நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் ஒன்று பாதயாத்திரை சென்ற பக்தர்களின் கூட்டத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடலூர் மாவட்டம், பென்னடம் அருகே உள்ள தோழர்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த மலர்க்கொடி, விஜயலட்சுமி, சசிகலா மற்றும் சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சேர்ந்த சித்ரா ஆகிய 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தோழர்குடிகாட்டைச் சேர்ந்த ஜோதிலட்சுமி என்பவர் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கார் ஓட்டுநரான சென்னை திரிசூலம் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த கெளதம் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications