பெரம்பலூர் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணனை.. கையும் களவுமாக சிக்க வைத்த ஒரே ஒரு வீட்டு வரி ரசீது
பெரம்பலூர்: வீட்டிற்கு நகராட்சியில் ரசீது போடுவதற்காக பெரம்பலூர் நகராட்சி வருவாய் ஆய்வாளரான புதுக்கோட்டை மாவட்டம், சின்ன அய்யன் வயல் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் புகாரின் பேரில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க முடியும். லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஆடியோ அல்லது வீடியோ அனுப்பினால், அதனை வைத்து கையும் களவுமாக பிடித்து நடவடிக்கை எடுப்பார்கள். லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக சிக்கும் அதிகாரிகள் அடுத்த ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

அவர்கள் பணியிடை நீக்கத்தில் இருந்து மீண்டு திரும்பவும் பணிக்கு திரும்பினாலும் வழக்கு நடந்து வரும். எவ்வளவு பெரிய பதவிக்கு உயர்ந்தாலும், அவர்கள் தலை மேல் தொங்கும் கத்தியாக லஞ்ச வழக்கு நிற்கும். இந்த வழக்கில் பலர் அண்மைக்காலத்தில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றிருக்கிறார்கள். என்ன தான் போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் லஞ்சம் வாங்கி கைதாகும் நபர்கள் எண்ணிக்கை குறையவே இல்லை.. பெரம்பலூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
பெரம்பலூரில் ஆலம்பாடி ரோடு அன்பு நகரை சேர்ந்த முத்துசாமியின் மனைவி மகேஸ்வரி என்பவர் தற்போது பெரம்பலூர் நகர்ப்பகுதியில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். அந்த வீட்டிற்கு நகராட்சியில் ரசீது போடுவதற்காக மகேஸ்வரி தனது உறவினரான பெரம்பலூர் சங்குப்பேட்டையை சேர்ந்த 60 வயதாகும் மெய்யன் என்பவர் மூலம் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், சின்ன அய்யன் வயல் பகுதியை சேர்ந்த 53 வயதாகும் கண்ணன் என்பவர் பெரம்பலூர் நகராட்சி வருவாய் ஆய்வாளராக இருக்கிறார். இவர் தற்போது பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தின் பின்புறத்தில் வசித்து வருகிறார். பெரம்பலூர் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணன் மெய்யனிடம் வீட்டிற்கு நகராட்சியில் ரசீது போடுவதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத மெய்யன் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை கண்ணனிடம் கொடுக்க மெய்யனுக்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன்படி மெய்யன் நேற்று காலை தனது வீட்டில் பணத்துடன் இருந்தார். லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரும் வீட்டின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அப்போது வீட்டிற்கு வந்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணன், மெய்யனிடம் லஞ்ச பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று கண்ணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரது அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications