கோவை தம்ரோ நிறுவனம் முற்றுகை.. தமிழர் விடியல் கட்சியினர் கூண்டோடு கைது
தம்ரோ நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: இலங்கையில் நடைபெற்ற இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு நீதி கேட்கும் மாதமாக மே மாதத்தை அனுசரிக்கும் பொருட்டு இலங்கையை தலைமையிடமாக கொண்ட தம்ரோ நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த இருபத்தைந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தம்ரோ பர்னிச்சர் கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இலங்கையை தலைமையிடமாக கொண்டு செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை தமிழர்கள் இறப்பிற்கு நீதி கேட்கும் விதமாக மே மாதத்தை அனுசரிக்கும் பொருட்டு இலங்கையை தலைமையிடமாக கொண்ட தம்ரோ நிறுவனத்தை இன்று தமிழர் விடியல் கட்சியினர் முற்றுகையிட முயன்றதையடுத்து காவல்துறையினர் முற்றுகையில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்தனர்.
இனப்படு கொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் தனித்தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐநா நடத்த வேண்டும் என போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. மேலும் தனி தமிழீழம் அமைய வேண்டும் என்று கோஷமிட்டவர்கள், தம்ரோ, லைக்கா உள்ளிட்ட நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.