இது லிஸ்டுலயே இல்லை.. புதுச்சேரியில் தாமரையை மலர வைக்க அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்.. ரகிட ரகிடதான்!
புதுச்சேரி: என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்.. என்று ரகிட ரகிட பாடலில் வருவதை போலத்தான் பாஜகவும் தற்போது சந்தோசமாக இருக்கிறது. காரணம் புதுச்சேரிக்காக பாஜக வகுத்து இருக்கும் திட்டம்!
புதுச்சேரியில் தாமரையை மலர வைக்க அமித் ஷா பிளான் போட்டுவிட்டார்.. இன்னும் சில நாட்களில் ஒவ்வொரு பிளானாக அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். 2016 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிபெற்றது.
இங்கு காங்கிரஸ் சார்பாக நாராயணசாமி முதல்வராக இருந்தார். ஆனால் தேர்தல் நெருங்குவதற்கு சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
எப்படி
இதுவே பாஜக வகுத்த ஆபரேஷன் கமலா மூலம்தான் நடந்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக, என். ஆர் காங்கிரசில் சேர்ந்ததால் மொத்தமாக திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதன்பின் புதுச்சேரியில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. என்.ஆர் காங்கிரஸ் யார் பக்கம் செல்லும் என்பது பெரிய குழப்பமாக இருந்தது.
குழப்பம்
கடந்த ஒரு வாரமாக என். ஆர் காங்கிரசின் ரங்கசாமி என்ன செய்ய போகிறார் என்பது பெரிய விவாதமாக இருந்தது . என். ஆர் காங்கிரஸ் - பாஜக - அதிமுக சேர்ந்து கூட்டணி அமைக்குமா அல்லது என். ஆர் காங்கிரஸ் - காங்கிரஸ் - திமுக சேர்ந்து கூட்டணி அமைக்குமா என்று விவாதம் நிலவியது. ரங்கசாமியை முதல்வராக ஏற்க திமுக, காங்கிரசும் ரெடியாகவே இருந்தது .
முடிந்தது
ஆனால் நேற்று திடீர் திருப்பமாக என். ஆர் காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டது. அதன்படி இந்த கூட்டணியில் என் . ஆர் காங்கிரஸ் 15 இடங்களில் போட்டியிடும் + முதல்வர் பதவி, அதேபோல் 14 இடங்களை அதிமுக - பாஜக- பாமக பிரித்துக் கொள்ளும் என்று கூறப்பட்டது. இதில் பாமகவிற்கு அதிக இடங்களை கொடுக்க பாஜக விரும்பவில்லை. இதனால் பாமக புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.
வெளியேற்றம்
பாமக வெளியேறி தனியாக நிற்க முடிவு செய்துவிட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது அதிமுகவிற்கு குறைவான இடங்களை ஒதுக்கிவிட்டு அதிக இடங்களில் போட்டியிடலாம் என்று அமித் ஷா நினைக்கிறார் என்று தகவல்கள் வருகிறது. அதாவது 14 இடங்களில் பாஜக 10 இடங்களிலும் அதிமுக 4 இடங்களில் மட்டுமே போட்டியிடும் என்று தகவல்கள் வருகிறது.
தமிழகம்
"தமிழகத்தில் 20 இடம் கொடுத்த போது நாங்கள் ஏற்றுக்கொண்டோம் அதனால் புதுச்சேரியில் நீங்கள் தியாகம் செய்யுங்கள். நாங்களும் இங்கே வளர இதுதான் வழி" என்று பாஜக அதிமுகவிடம் கூறியுள்ளது. அதாவது புதுச்சேரியில் 10 இடங்களில் போட்டியிட்டு எப்படியாவது தனிப்பெரும் கட்சியாக மாற வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. என் ஆர் காங்கிரஸ் 15 இடங்களில் போட்டியிடுகிறது.
முடிவு
என். ஆர் காங்கிரசை விட அதிக இடத்தில் வெற்றிபெற்றால் தனிப்பெரும் கட்சி என்ற பெயரில் முதல்வர் பதவியை பறிக்க முடியும் என்று பாஜக நம்புகிறது. இதனால்தான் புதுச்சேரியில் வலிமையாக இருக்கும் பாமகவிற்கும் சீட் கொடுக்க பாஜக முன்வரவில்லை. அதிமுகவிற்கும் சீட் கொடுக்க பாஜக முன் வரவில்லை. 10 இடங்களில் களமிறங்க பாஜக தீவிரமாக இருக்கிறது .