''எங்களையும் பாஸாக்கி விடுங்க எடப்பாடி ஐயா''.. பிரசாரத்தின்போது முதல்வரிடம் கூறிய பிளஸ் 2 மாணவர்கள்!
புதுச்சேரி: புதுவை அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிசாரம் செய்து கொண்டிருந்தபோது, எங்களையும் பாஸாக்கி விடுங்கய்யா'' என்று பிளஸ் 2 மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. திமுக, அதிமுக கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான திருசிற்றம்பலம் கூட் ரோட்டில் வானூர் அதிமுக வேட்பாளர் சக்கரபாணியை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அதிமுக திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறியும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினையும் வறுத்தெடுத்து கொண்டிருந்தார். மேலும், பள்ளி மாணவர்களை பாஸ் செய்தது குறித்தும் பேசினார்.
அங்கு ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் கூடி இருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பிளஸ் 2 மாணவர்கள் சிலர், '' எடப்பாடி ஐயா..எடப்பாடி ஐயா... எங்களையும் பாஸாக்கி விடுங்கய்யா'' என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆனால் மாணவர்களின் ஆதங்க குரல் அதிக கூட்டம், இரைச்சல் காரணமாக எடப்பாடியாரின் காதில் விழவில்லை என்பதுதான் பெரும் சோகம். தமிழகத்தில் கொரோனா காரணமாக 11-ம் வகுப்பு வரை வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications