புதுச்சேரியில் வலையில் சிக்கிய 20 டன் அதிசய மீன்.. கடலில் செம்பராவை பார்த்ததுமே குஷியில் மீனவர்கள்
புதுச்சேரி: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவர்களிடம் பிடிபடுவதை போலவே, புதுச்சேரி காரைக்கால் மீனவர்களிடமும் செம்பரா மீன் சிக்கியிருக்கிறது.. இந்த மீனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா? இந்த மீனுக்கு ஏன் இவ்வளவு கிராக்கி உள்ளது?
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் கிடைக்கும் அரிதான மீன்தான், செந்நிறத்திலான செம்பரா மீன்.. இந்த மீனை பார்த்தாலே மீனவர்கள் குஷியாகிவிடுமாம்.

காரணம், இந்த மீனின் சிறப்புகள் அளவிட முடியாதவை.. சிவப்பு நிறத்தில் இருப்பதால், இந்த மீனை செம்பரா மீன் என்று அழைக்கப்படுகிறது.. வரிப்பாறை என்றும் இதனை சொல்வார்கள்.. ஆங்கிலத்தில் இதற்கு ரெட் ஸ்னேப்பர் என்பார்கள்.
பெரும்பாலும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வாழக்கூடியது இந்த மீன் இனம் . கடலில் ஏற்படக்கூடிய பருவ மாற்றத்தினால் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு திடீரென இந்த மீனின் வரத்து அதிகமாகிவிடும்.
தட்டையான மீன்கள்: இந்த மீன்கள் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தக்கூடியவை.. இந்த மீன்கள் பார்ப்பதற்கு தடிமனான உடலமைப்புடன், தட்டையாக இருக்கும். .. அரை கிலோவில் இருந்து அதிகபட்சமாக 15 கிலோ வரையிலும் இவற்றின் எடை இருக்குமாம். அதிகபட்சமாக ஒரு மீன் 10 கிலோ எடையில் பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் சொல்கிறார்கள்.
ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த இந்த மீன் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.. இந்த இருவகையான பாதிப்புகளுமே உலகம் முழுவதும் நிறைந்திருப்பதால், இந்த மீனுக்கு, பல்வேறு நாடுகளில் நிறைய கிராக்கி உள்ளது.. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் உணவகங்களுக்கு மட்டுமல்லாமல், தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தின் கொச்சி துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மீன்கள்: கிலோ 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரையிலும் இந்த மீன் விற்கப்படுகிறது. விலை மலிவு என்றாலும், இந்த மீனுக்கு எப்போதுமே கிராக்கி இருந்து கொண்டிருக்கிறது. ஒரே நாளில் ஆயிரம் கிலோ வரைக்கும்கூட விற்பனை நடந்திருக்கிறதாம்.
இந்நிலையில், புதுச்சேரி காரைக்கால் துறைமுகத்திலிருந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள், கடந்த சில நாட்களாகவே அதிகளவிலான செம்பரா மீன்களுடன் கரை திரும்புகிறார்களாம்.. காரைக்கால் துறைமுக ஏலக்கூடத்தில், ஏராளமான படகுகளிலிருந்து இந்த வகை மீன்கள் இறக்கப்பட்டன.. 20 டன்னுக்கும் அதிகமாக இந்த வகை மீன்கள் கிலோ 300 என்ற விலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்பனையாகி இருக்கிறது..
மீனவர்கள்: வெளிநாட்டினர் விரும்பக்கூடிய மீன் என்பால், பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியில் முகவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கோட்டுச்சேரி மற்றும் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் 100க்கும் மேற்பட்ட விசைப்படகில் கடலுக்கு சென்றபோது, இந்த செம்பரா மீன்கள் அவர்களது வலையில் சிக்கியிருக்கிறது..
செம்பரா மீன் வந்திருக்கிறது என்று தெரிந்ததுமே, துறைமுகத்திலேயே மீன் பிரியர்கள் அவற்றை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். இதேபோல் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் செம்பரா மீன்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வாய்ப்பில்லை: பருவநிலை மாற்றத்தில் இவை தற்போது இந்த பகுதிக்கு வந்திருப்பதாகவும், இனிமேல் செம்பரா மீன்கள் தொடர்ந்து கிடைக்க வாய்ப்பில்லை என்றும் மீனவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications