புதுவையில் சோகம்: சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் 5 பேர் பலி!
புதுவை: புதுவையில் வாய்க்கால் கட்டும் பணியின்போது மின்துறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தமிழகத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் உள்பட 5 பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
புதுவை மரப்பாலம் வசந்த் நகர் பகுதியில் பொலிவுறு நகரத் திட்டம் சார்பில் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை அந்த பணியில் 16 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் மின் துறைக்கு சொந்தமான 33 ஆண்டு பழமையான சுற்றுச் சுவர் திடீரென சரிந்து விழுந்தது. இதில் வாய்க்கால் அமைக்கும் பணியில் இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கமல், ராஜேஷ் கண்ணா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை, காவல் துறையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராத காரணத்தினால் மினி லாரியில் வைத்து தொழிலாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கட்டுமான பணிகளில் திருவண்ணாமலை, ஆத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அரியலூர் மாவட்டம் நெட்டகுறிச்சியை சேர்ந்த பாக்கியராஜ், பாலமுருகன், ஆரோக்கியராஜ் ஆகியோர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 16 பேரில் 10 பேர் எந்தவித காயமும் இல்லாமல் உயிர் பிழைத்ததாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications